மோடி, அமித் ஷா, யோகி.. 10 நாட்களுக்கு.. தமிழகத்தில் மொத்தமாக முகாம்.. யார், யார் எங்கே பிரச்சாரம்?
சென்னை: அடுத்த 10 நாட்களுக்கு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் காவி நிற கொடிகள் தென்பட போகின்றன. பிரதமர் நரேந்திர மோடி முதல் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் உட்பட பலரும் தமிழகத்தில் முகாமிட்டு தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.
அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
கோவை தெற்கு வானதி சீனிவாசன், ஆயிரம் விளக்கு குஷ்பு, அரவக்குறிச்சி அண்ணாமலை, காரைக்குடி எச்.ராஜா, தாராபுரம் எல்.முருகன் ஆகியோரை ஸ்டார் வேட்பாளராக பார்க்கிறது பாஜக மேலிடம். எனவே அவர்கள் தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்வதற்கு மோடி மற்றும் அமித் ஷா ஆகிய இருவரும் உறுதியாக இருக்கிறார்கள்.
தமிழகம் வருகை
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள நாளை மறுநாள் முதல் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தமிழகம் வர உள்ளார்கள். அதற்கான ஷெட்யூல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. நாளை மறுநாள் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா திட்டக்குடி, திருவையாறு மற்றும் சென்னை துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இரு தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
ஸ்மிருதி இரானி, பிரதமர் மோடி
மத்திய அமைச்சரும் பாஜகவின் பெண் ஸ்டார் பரப்புரையாளருமான ஸ்மிருதி இராணி வருகின்ற 27ம் தேதி கோவை தெற்கு மற்றும் சென்னை துறைமுகம் ,ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார்.
பிரதமர் மோடி வருகிற 30ம் தேதி தமிழகம் வருகிறார். முருகனை ஆதரித்து தாராபுரத்தில் பரப்புரை மேற்கொள்கிறார்.
யோகி ஆதித்யநாத்
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் 31ம் தேதி ஊட்டி மற்றும் தளி தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வார். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விருதுநகர், கோவை தெற்கு பகுதிகளில் 31ம் தேதி பரப்புரை செய்வார்.
காவிக் கொடிகள்
உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏப்ரல் 1ம் தேதி அரவக்குறிச்சியில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள உள்ளார். மதுரையில் பிரதமர் மோடி வருகின்ற 2ம் தேதி பிரச்சாரம் செய்வார்.
எனவே அடுத்த 10 நாட்கள் தமிழகம் முழுக்க காவிக் கொடிகளும், பாரத் மாதாகி ஜெய் கோஷங்களும் தீவிரமாக எதிரொலிக்கப்போகின்றன.