ஆவின் பொருட்கள் விலையேற்றம்.. பால் கொள்முதல் ரேட் ஏன் ஏறவில்லை.. அண்ணாமலை கேள்வி!
சென்னை: தமிழ்நாட்டில் விடியல் தருவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்து விலையேற்றத்தை மட்டுமே திமுக அரசு தந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
ஆவினில் விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், ஆவின் இனிப்பு வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்களில் விலையேற்றம் முன்னிலையில் இருக்கிறது. மக்களின் மேல் அக்கறை கொண்டவர்களை போல நாடகமாடிய இந்த திமுக அரசின் சாயம் வெளுக்க தொடங்கிவிட்டது. சென்ற வாரம் மின் கட்டண உயர்வின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன் ஆவின் பொருட்களின் விலையை ஏற்றியுள்ளார்கள்.

அண்ணாமலை அறிக்கை
திமுக 2021ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் ஏமாற்று வாக்குறுதிகள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மக்களின் மீது சுமத்தப்படும் வரிகள் மற்றும் விலையேற்ற நடவடிக்கைகள் இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக கட்டுமான பொருட்களின் விலையை ஏற்றினர்.

தொடரும் கட்டண உயர்வு
இதனைத்தொடர்ந்து வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் மின்சார கட்டணம் போன்றவற்றை உயர்த்தி உள்ளது. மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத திமுகவிடம் அவர்களின் தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை செய்யுங்கள் என்று யாராவது கேள்வி கேட்டால் உதாசீனப் படுத்துகிறார்கள். வாக்குறுதிகளை சொல்லி தானே வெற்றிபெற்றீர்கள் அதை நிறைவேற்ற வேண்டாமா என்று கேட்டால் தேர்தல் வாக்குறுதிகள் வெற்றியை நிர்ணயிக்காது என்கிறார் திமுக அரசின் நிதி அமைச்சர்.

பால் விலை உயர்வு
2022ம் ஆண்டு மார்ச் மாதம் ஆவினில் இருந்து தயாரிக்கப்படும் பால் பொருட்களின் விலையை திமுக உயர்த்தியது. அப்போது நெய் லிட்டருக்கு ரூ.30, பாதாம் பால் பவுடர் கிலோவுக்கு ரூ.100 ரூபாய் வரையிலும் உயர்த்தப்பட்டது. தமிழக நிதி அமைச்சர் பங்கேற்ற 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அவரின் ஒப்புதலோடு பரிந்துரைக்கப்பட்ட பால் பொருட்களுக்கான 5 சதவிகித வரி விதிப்பை காரணம் காட்டி ரூ.10க்கு விற்ற தயிருக்கு ரூ.10.50 என்று உயர்வதற்கு பதில் ரூ.12 உயர்த்தியது.

ஆவின் இனிப்பு பொருட்கள் விலை உயர்வு
தற்போது ஆவினில் இனிப்பு வகைகளின் விலையையும் உயர்த்தியுள்ளார்கள். குலாப் ஜாமுன், ரசகுல்லா, பால்கோவா உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு ரூ.20 முதல் ரூ.80 வரை உயர்த்தி இருப்பது அடுத்ததாக வரும் பண்டிகைக்கு ஆவினில் நடுத்தர ஏழை மக்கள் சென்று இனிப்பு வகைகள் வாங்க இயலாத சூழலை உண்டாக்கியுள்ளது.

விலையேற்றத்தை நிறுத்துக
தாங்களாகவே அனைத்திற்கும் விலையை ஏற்றி வைத்து விட்டு மத்திய அரசு தான் சொன்னது நாங்கள் செய்தோம் என்று பொய் பிரச்சாரங்களை செய்யும் திமுக அரசு, தமிழக மக்களின் மீது திணிக்கும் இந்த விலையேற்றத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். விடியல் தருவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்து விலையேற்றத்தை மட்டுமே தந்துள்ளது இந்த திமுக அரசு.

கொள்முதல் விலை ஏற்றப்பட்டதா?
இப்படி 3 மாதங்களுக்கு ஒரு முறை விலையேற்றி வரும் ஆவின் நிறுவனம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பாலின் விலையை ஏன் இதுவரை ஏற்றவில்லை? என்ற கேள்விக்கு சம்மந்தமே இல்லாமல் பதில் சொல்வது பால்வளத்துறை அமைச்சர் நாசர் வாடிக்கையாகிவிட்டது என்று விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications