அன்னையின் அவதாரமாக நம்மிடையே வாழ்ந்தவர் பங்காரு அடிகளார்.. அண்ணாமலை இரங்கல்!
சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர், பங்காரு அடிகளார் மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் இன்று காலமானார். அவருக்கு வயது 82. மேல் மருத்துவத்தூரில் இவர் தொடங்கிய அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தி கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார்.

இந்நிலையில், பங்காரு அடிகளாரின் மறைவு, அவரது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஏராளமான பொதுமக்கள் மேல்மருவத்தூரில் திரண்டுள்ளனர். பங்காரு அடிகளாரின் மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், "மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர், தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் இறைவன் திருவடி அடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய ஆதிபராசக்தி அம்மனை வேண்டிக் கொள்கிறேன்.
கோடிக்கணக்கான மக்களின் குருவாகவும், ஆன்மீக மற்றும் கல்விப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவரும், ஏழை, எளிய மக்களின் வழிகாட்டியாகவும் விளங்கிய பங்காரு அடிகளார் அவர்களது மறைவு, நமது சமூகத்துக்குப் பேரிழப்பு. அவரின் ஆன்மீக அன்பர்களுக்கும் பக்தர்களுக்கும்
தமிழ்நாடு பாஜக சார்பாக ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னையின் அவதாரமாக நம்மிடையே வாழ்ந்து முக்தியடந்த அவரது பிரிவைத் தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தினருக்கும், பக்தர்களுக்கும் அம்மன் வழங்கட்டும். ஓம் சாந்தி." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications