கடலே இல்லையாம்.. ‘விஜயவாடா துறைமுகமா?’ - அமைச்சர் பொன்முடியை ரவுண்டு கட்டிய பாஜக!
சென்னை : விஜயவாடா துறைமுகத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு போதைப் பொருட்கள் வருவதாக அமைச்சர் பொன்முடி பேசியதைத் தொடர்ந்து, பாஜகவினர், 'கடலே இல்லாத விஜயவாடாவில் துறைமுகமா?' என ரவுண்டு கட்டி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவது பற்றி செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, துறைமுகங்களை தனியார் மயமாக்கியதால், போதைப்பொருட்கள் நடமாட்டம் வளர்ந்து இருக்கிறது. மத்திய அரசு இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
மேலும், விஜயவாடா துறைமுகம் வழியாக போதைப்பொருட்கள் தமிழகத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. முந்த்ரா துறைமுகத்துக்கும், விஜயவாடாவுக்கும் தொடர்பு இருக்கிறது எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடி சொன்னபடி விஜயவாடாவில் துறைமுகமே இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆர்எஸ்.எஸ் மாநிலத் தலைவர் எஸ்.ஜி.சூர்யா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் பொன்முடி
தமிழகத்தில் போதைப்பொருள் அதிக அளவில் பரவியதற்கு, பிரதமரின் சொந்த மாநிலமே காரணம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டினார். மத்திய அரசால் தான் போதைப்பொருள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தான் போதைப்பொருள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கிறது. குஜராத் வழியாகவே ஏராளமான போதைப்பொருள்கள் இந்தியாவுக்குள் வருகின்றன. தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள துறைமுகங்கள் வழியாகவே போதைப்பொருள் கடத்தல் நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார்.

விஜயவாடா துறைமுகம்
மேலும், குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் ஏராளமான போதைப்பொருள்கள் பிடிபட்டுள்ளன. விஜயவாடா துறைமுகத்திலும் அதிக அளவு போதைப் பொருள் கடத்தல் நடப்பது தமிழகத்தில் போதைப் பொருள் அதிகரிக்க காரணமாக உள்ளது. விஜயவாடாவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு இதில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. துறைமுகங்களை தனியாருக்கு விடாமல், அரசாங்கமே ஏற்று நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார் அமைச்சர் பொன்முடி.

அண்ணாமலை கிண்டல்
இதற்கு பதிலடியாக அறிக்கை விடுத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "விஜயவாடா துறைமுகத்திலிருந்து தமிழகத்திற்கு போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுகிறது என்கிறார் அமைச்சர் பொன்முடி. இதில் கொடுமை என்னவென்றால் விஜயவாடாவில் துறைமுகம் மட்டுமல்ல, கடலே இல்லை என்பதே உண்மை. இப்படி வாட்ஸ்-அப்பில் வந்த வதந்திகளை பத்திரிகையாளர்களிடம் சொல்லலாமா? தெரியாத விஷயத்திற்குள் அமைச்சர் போகக்கூடாது" என கிண்டல் செய்தார்.

மெய்சிலிர்த்துப் போனோம்
மேலும் அண்ணாமலை, ஆகஸ்ட் 11ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போதை பயன்பாட்டிற்கு எதிராக உறுதிமொழி எடுத்தார். எடுத்த மூன்றாவது நாள் தமிழகத்தில் ஒரே நாளில் 273.9 கோடி ரூபாய்க்கு மது விற்று புதியதோர் சாதனையை செய்தது தமிழக அரசு. போதையை ஒழிப்பதில் தமிழக அரசின் தீவிரத்தை மக்கள் கண்டு மெய்சிலிர்த்துப் போன தருணம் அது. தங்களின் திறனற்ற தன்மையை மறைக்க மத்திய அரசின் மேல் பழி போடுவதை திமுக நிறுத்தி கொள்ள வேண்டும். தமிழகத்தை கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியது தான் திமுக அரசின் சாதனை. என விமர்சித்திருந்தார்.

இந்த லட்சணத்தில்
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, "நான்கு பக்கம் நிலம் சூழ்ந்துள்ள விஜயவாடாவில் துறைமுகம் இருக்கிறது, அங்கு இல்லாத துறைமுகம் மூலம் கஞ்சா கடத்தப்படுகிறது என்கிறார் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்த லட்சணத்தில் கல்வித்துறை அமைச்சர் இருந்தால் மாநிலத்தின் கல்வி நிலை என்னவாக இருக்கும் நண்பர்களே? இதுதான் திராவிட மாடல் கல்வியோ?" என கிண்டல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications