ஓபிஎஸ்ஸை ஒற்றைத் தலைமையாக ஏற்கவேண்டும்.. ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - புரளி ஆசாமி கைது!
சென்னை : அதிமுகவின் ஒற்றை தலைமையாக ஓ.பி.எஸ்ஸை ஏற்காவிட்டால் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் புயலாகக் கிளம்பி, கடும் பரபரப்புகளுக்கு இடையே இன்று பொதுக்குழு கூட்டம் தொடங்கியிருக்கிறது.
இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வத்தை ஒற்றைத் தலைமையாக ஏற்காவிட்டால் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த புரளி ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

வெடிகுண்டு மிரட்டல்
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர், அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை ஒற்றைத் தலைமையாக ஏற்காவிட்டால் தாம்பரம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள், உடனடியாக தாம்பரம் ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்து உஷார் படுத்தினர்.

தீவிர சோதனை
ரயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த் தலைமையில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ், ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் மற்றும் போலீசார் மோப்ப நாய் ரூபா மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று தாம்பரம் ரயில் நிலையம் முழுவதும் உள்ள அனைத்து நடைமேடைகள், ரயில்கள் மற்றும் பொதுமக்களிடம் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். ஆனால் இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

வெறும் புரளி
பின்னர்தான் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. அதன்பிறகே ரயில்வே போலீசார் நிம்மதி அடைந்தனர். இதனால் தாம்பரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பது தெரியவந்தது.

ஒற்றைத் தலைமை
வினோத்குமாரிடம் நடத்திய விசாரணையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகவும், அ.தி.மு.க ஒற்றைத் தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் வரவேண்டும் என்பதற்காகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே 2 முறை
இந்த வினோத்குமார் 2019-ம் ஆண்டு இரண்டு முறை இதேபோல குடிபோதையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்து, 2 முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications