திரிபாதியின் பதவிக்காலம் முடிகிறது.. தமிழகத்தின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு?
சென்னை: தமிழக டிஜிபியாக உள்ள திரிபாதியின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக டிஜிபியாக பதவி வகித்து வந்த டிகே ராஜேந்திரனின் பணிக்காலம் முடிவடைந்த போது கடந்த 2019ஆம் ஆண்டு சட்ட ஒழுங்கு டிஜிபியாக ஜே கே திரிபாதியை தமிழக அரசு நியமித்தது.
தமிழகத்தின் 29 ஆவது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக திரிபாதி பதவியேற்றார். வரும் ஜூன் மாதம் அவர் பதவிக்காலம் முடிவடைகிறது.
பல தொகுதிகளில்.. தண்ணீர் குடித்த திராவிட கழகங்கள்.. 'சுள்ளான்' கட்சிகள் அதகளம்
டிஜிபி
இதனால் தமிழகத்தின் முக்கிய பொறுப்பான சட்டம் ஒழுங்கு டிஜிபியாக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் பணி மூப்பு அடிப்படையில் சைலேந்திர பாபு, கரன் சின்ஹா, சஞ்சய் அரோரா, சுனில் குமார் சிங், கந்தசாமி உள்ளிட்டவர்களில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.
5 பேரின் பெயர்கள்
நாளை மறுநாள் பொறுப்பேற்கவுள்ள புதிய அரசு இந்த 5 பேரின் பெயர்களை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பும். இதில் மூவரை தேர்வு செய்து உள்துறை அமைச்சகம் தமிழக அரசிற்கு அனுப்பி வைக்கும். அந்த 3 பேரில் யாரேனும் ஒருவரை டிஜிபியாக தமிழக அரசே தேர்வு செய்து அதை மத்திய அரசின் ஒப்புதலுக்கு மீண்டும் அனுப்பி வைக்கும்.
டிஜிபி
தமிழக அரசின் தேர்விற்கு மத்திய உள்துறை ஒப்புதல் வழங்கிவிட்டால் அடுத்த டிஜிபி தேர்வு செய்யப்பட்டுவிடுவார். அந்த வாய்ப்பு சைலேந்திர பாபுவுக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது ரயில்வே துறை டிஜிபியாக உள்ளார். முன்னர் தீயணைப்புத் துறையின் இயக்குநராக பதவியேற்றிருந்தார்.
கராத்தே பயிற்சி
இவரது பதவிக்காலத்தில் பள்ளிகளில் கணினி பயிற்சிகளையும் ஏழை குழந்தைகளுக்கு இலவச கராத்தே வகுப்புகளையும் முன்னெடுத்தார். எப்போதும் உடல்நலனில் அக்கறை கொண்ட இவர் கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பேரணி 32 நாட்கள் நடத்தி முடித்தார். பொதுமக்களிடம் நற்பெயரை சம்பாதித்தவர், ஊழலுக்கு எதிரானவர்.