"அவங்க" என் மனைவிக்கு அத்தை.. சுதீஷ் பேசுவாரே.. திமுகவுக்கு உதவுறதே பாஜகதான்.. டிடிவி தினகரன் பொளேர்
அமமுக கூட்டணி குறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேட்டி தந்துள்ளார்
சென்னை: வரும் எம்பி தேர்தலில் யாருடன் அமமுக கூட்டணி வைக்க போகிறது? என்பது இதுவரை வெளிப்படையாக தெரியாத நிலையில், கூட்டணி குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வருட காலமாகவே, சசிகலாவிடம், டிடிவி தினகரன் நெருக்கம் காட்டுவதில்லை என்றும், சசிகலா பங்கேற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்று அமமுக நிர்வாகிகளுக்கு, சைலண்ட உத்தரவை தினகரன் பிறப்பித்ததாகவும் செய்திகள் வலம்வந்தபடியே இருந்தன.
அதேபோல, சசிகலாவின் கொள்கைகளை உரக்கச் சொல்வதற்கும், அவரை அதிமுகவின் பொதுச்செயலாளராக அமரவைப்பதற்கும் சூளுரைத்த தினகரன், குறைந்தபட்சம் ட்விட்டரில்கூட அவரை பின்தொடராதது சசிகலா ஆதரவாளர்களிடையே பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகிறது.
சசிகலாவின் காலை பிடித்த எடப்பாடி! இபிஎஸ் இதயம் ஏன் 'பச்சக் பச்சக்’ எனத் துடித்தது? விளாசிய திமுக!
மௌனம்
இப்படிப்பட்ட சூழலில், கடந்த சில நாட்களுக்குமுன்பு திடீரென சசிகலாவை சந்தித்து பேசியிருந்தார் தினகரன்.. அப்போது செய்தியாளர் தினகரனிடம், சசிகலா மெளனமாகவே இருக்கிறாரே ஏன்? என்று கேட்டனர். அதற்கு டிடிவி தினகரன், "இதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்" என முடித்துக்கொண்டாரே தவிர, விளக்கமாக சொல்லவில்லை.. அதேபோல, சசிகலாவை திடீரென சந்தித்து பேச வேண்டிய காரணத்தையும் சொல்லவில்லை.. அதிமுகவில் கோர்ட், கேஸ்கள் சூடுபிடித்து வரும் நிலையில், இவர்களின் இந்த சந்திப்பு மிகுந்த பரபரப்பை அப்போது ஏற்படுத்தியிருந்தது.
சித்தி அவங்க
இப்போதும் அதிமுக விவகாரம் ஒருமுடிவுக்கு வராத சூழலில், தீர்ப்பை எதிர்நோக்கி லட்சக்கணக்கான தொண்டர்கள் காத்துள்ளனர்.. இந்நிலையில், நேற்றைய தினம் செய்தியாளர்களுக்கு தினகரன் பேட்டி தந்தார். அப்போதும் இதே கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர்.. சசிகலாவை சந்தித்து பேசினீர்களே ஏன்? என்று கேட்டனர்.. அதற்கு தினகரன் பதில் சொன்னதுடன், திமுக, அதிமுக கட்சிகளையும் சரமாரியாக விமர்சித்துள்ளார்.. போகிற போக்கில் பாஜகவையும் விமர்சித்திருந்தார்.. அதன் சுருக்கம்தான் இது:
வாயே வலிக்குது
"சித்தியுடன் எனக்கு பிரச்சனைன்னு நீங்களே காத்துல செய்திகளை எழுதினால் எப்படி? அதுக்கெல்லாம் நான் பதில் சொல்லிட்டு இருக்க முடியுமா? நான் பலமுறை சொல்லிட்டேன், எங்களுக்குள் பிரச்சனை இருக்கா இல்லையா? என்பதை காலம் பதில் சொல்லும்.. ஏன் என்றால், பலமுறை இதுக்கு நான் பதில் சொல்லி, என் வாயே வலிக்குது.. நான் அவங்களை சந்திப்பது என்பது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி எல்லாம் கிடையாது.. அவங்க என் அம்மாவுடைய தங்கை, என்னுடைய சித்தி, என் மனைவிக்கு அத்தை.. அதனால எப்பவுமே சந்திக்கதானே செய்வோம்? தேவை ஏற்படும்போதெல்லாம் அவங்களை சந்திப்பேன்.. அப்படித்தான் சமீபத்திலும் சந்தித்துவிட்டு வந்தேன்.
விஜயகாந்த்
கூட்டணி பற்றி இப்பவே பேச முடியாது.. முதலில், கட்சியை பலப்படுத்துவது, பாராளுமன்ற தேர்தல் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலை நோக்கி, ஒவ்வொரு மாவட்டத்தையும் சேர்ந்த அடிப்படை நிர்வாகிகள், ஒன்றிய, பேரூராட்சி, நகராட்சி செயலாளர்கள், மாநகராட்சி, பகுதி செயலாளர்கள் இப்படி எல்லாரையுமே சந்தித்து பேசி வருகிறோம். அடுத்தக்கட்ட பணிகள் குறித்தும் அவர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம்.. தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்பு, கூட்டணி பற்றி பேசலாம். முதல்ல கட்சி பலப்படுத்தணும்.. கடந்த முறை தேமுதிகவுடன் போட்டியிட்டோம். இப்போதும்கூட சுதீஷுடன் பேசுவேன்.. உள்ளாட்சி தேர்தலில் அவங்க தனியாகத்தான் போட்டியிட்டார்கள்.. இருந்தாலும் எங்களுக்குள்ளே ஒரு பிரச்சனையும் இல்லை. ஒருவேளை அவர்களுடன் கூட்டணி என்றால், அது தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம்.
கெட்டவுட்
சட்டமன்றத்தில் அதிமுக செயல்பாடுகளை பற்றி கேட்கிறீர்கள்.. அந்த கட்சியே செயல்படாமல் இருக்கிறது.. அந்த கட்சியின் தலைமை பதவியில் இருப்பதும் இரட்டை இலை சின்னம்தான். அந்த சின்னத்தை தருவதில் சிக்கல் உள்ளது.. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. கட்சி மட்டுமல்ல, சண்டை போட்டுக் கொள்பவர்களும்கூட செயல்படாமல்தான் உள்ளனர். திராவிட மாடல் என்கிற மக்களை ஏமாற்றுகிறது திமுக.. அன்று கோ பேக் மோடி என்பதுபோல், இன்று கெட் அவுட் ரவி என்கிறார்கள்.. தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறைக்கவே இப்படியெல்லாம் செய்கிறார்கள்.
க்ளீன் ஸ்வைப்
கவர்னர் உரை என்பது ஒரு சம்பிரதாய சடங்காகும். அதில் எதுவும் மக்களுக்கான திட்டமும் அறிவிக்கவில்லை.. அதனால் வரும் எம்பி தேர்தலில் திமுகவுக்கு பெரும் பின்னடைவை நிச்சயம் உண்டாக்கும். ஆளுநர் செய்த நடவடிக்கையை, பாஜகவினரே சமாளிக்க முடியாமல், ரொம்ப கஷ்டப்பட்டதை தொலைக்காட்சிகளில் பார்த்தேர்ம்.. இன்று திமுக வளர்வதற்கு அவர்கள் உதவி செய்வது போல தெரியுது.. திமுக அரசின் குறைகளை, அனைத்து கட்சிகளும் வெளிப்படுத்தி வரும் இப்படிப்பட்ட நேரத்தில், ஆளுநரின் இதுபோன்ற நடவடிக்கைகள், திமுகவுக்குதான் உதவும்.. தங்கள் மீதான குறைகளை, இதை வைத்து திசைதிருப்ப பயன்படுவதாகவே தெரிகிறது" என்றார்தினகரன்.