மேல்நிலைப்பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தால் பாடப்பிரிவு நீக்கம்: அதிரடி அறிவிப்பு
சென்னை: அரசு பள்ளிகளில் மேல்நிலைப்பிரிவில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு, அதில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்யுமாறு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில், மேல்நிலை வகுப்புகளில் 1:40 என்ற ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தை பின்பற்ற வேண்டும். மேலும், மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்சி அல்லது மாநகராட்சி பகுதியாக இருந்தால், குறைந்தபட்சம் 30 மாணவர்களும், ஊரக பகுதியாக இருப்பின், குறைந்தபட்சமாக 15 மாணவர்கள் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேல்நிலைப் பிரிவில் 60 மாணவர்கள் வரை ஒரு பிரிவாகவும், 60 இருந்து 100 மாணவர்கள் வரை ஒரு பிரிவாகவும், ஒவ்வொரு கூடுதல் 40 மாணவர்களுக்கு, கூடுதல் பிரிவும் ஏற்படுத்திடவும் அனுமதிக்கப்படுகிறது. குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு, அதில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்யும்போது, ஒரு ஆசிரியருக்கு வாரத்திற்கு 28 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என்று கண்காணிக்கவும், அவ்வாறு போதிய பாடவேளையின்றி உள்ள முதுகலை ஆசிரியரை உரிய முறையில், அதற்கு கீழ்நிலை வகுப்புகளான 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்க பாடவேளைகளை ஒதுக்கீடு செய்யவும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யும்போது, ஒருகுறிப்பிட்ட பாடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து, அதில் ஒரு பணியிடம் உபரி பணியிடமாக இருந்தால், அப்பாடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களில் இளையோரை ஆசிரியருடன் உபரியாக காண்பிக்க வேண்டும்.
இதுதொடர்பான புள்ளி விவரங்களை அந்தந்த பள்ளிகள் தயார் செய்து, அதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக, பள்ளிக்கல்வி ஆணையரகத்திற்கு வரும் 26-ம் தேதி முதல் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications