நீதிமன்ற பணிக்கு செல்லும் வழக்கறிஞர்களை போலீஸ் தடுக்ககூடாதென வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: நீதிமன்ற பணிகளுக்காக செல்லும் வழக்கறிஞர்களை காவல்துறை தடுக்ககூடாது என உத்தரவிடக்கோரி வழக்கில் காவல்துறை விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கலையரசி தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை தான் போரூரிலிருந்து மூத்த வழக்கறிஞர் அலுவலகத்திற்கு பணிக்காக செல்லும் வழியில் காவல்துறையால் தடுக்கப்படுவதாகவும் இ பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என காவல்துறை தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையாக ஊரடங்கு பின்பற்றப்பட்டாலும் ஆன் லைன் வழியாக நீதிமன்றங்கள் செயல்பட்டுவரும் நிலையில், டெல்லி உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் நீதிமன்ற வழக்கு விசாரணை பணிகளுக்காக வழக்கறிஞர்கள் சென்று வர அனுமதிக்கப்படுவதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மற்ற மாநிலங்களில் அனுமதிக்கும்போது, சென்னையில் சொந்த அலுவலகங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.இதனால் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யும் பணி பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆன்லைனில் வழக்கு தாக்கல் செய்தாலும்,கூடுதல் ஆவணங்களை உயர்நீதிமன்றத்தில் நேரடியாக தரச்சொல்லி நீதிமன்ற அலுவலர்கள் தெரிவிப்பதாக மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் வழக்கறிஞர்கள் அலுவலக ரீதியாக அனுமதிக்க உத்தரவிடவேண்டும் என்று மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி சுப்பையா மற்றும் நீதிபதி கிருஷ்ணசாமி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கமளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 2ஆம் தேதியன்று ஒத்தி வைத்துள்ளனர்












Click it and Unblock the Notifications