பொரி சுண்டலுடன்.. சென்னை மின்சார ரயிலில் ஆயுதபூஜை செலிபிரேட்..ரயில்வே அதிகாரிகளுக்கு திடீர் உத்தரவு?
சென்னை: சென்னை மின்சார ரயிலில் பயணிகளுக்கு பொரி, சுண்டல், சர்க்கரை பொங்கல் வழங்கி ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நவராத்ரி விழாவின் 9-ஆம் திருவிழா நாளில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படும். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஆயுத பூஜை களை கட்டியது.
சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் வாழை இலை தோரணங்கள், பூக்களின் விற்பனை அமோகமாக இருந்தது. இதனால் அங்கு கடும் கூட்டம் காணப்பட்டது.
சொந்தங்களை ரயில் ஏற்றிவிட போகிறவரா நீங்கள்? பிளாட்பார்ம் பக்கம் போனா கட்டணம் ஷாக் அடிக்கும்!
ஆயுத பூஜை
ஆயுத பூஜையை தமிழகத்தில் உள்ள இந்துக்கள் உற்சாகமாக கொண்டாடினர். ஆட்டோ டிரைவர்கள், வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் தங்கள் தொழிலுக்கு உதுவும் பொருட்களை வைத்து பூஜை செய்தனர். பொரி, பழங்கள், சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவைகளை படைத்து வழிபாடு நடத்தினர். குறிப்பாக இன்று ஓடிய பல ஆட்டோக்களும் சந்தனம், வாழை இலை தோரணங்களுடன் சாலைகளில் சீறிப்பாய்ந்தன.
புறநகர் ரயில் சேவை
அதேபோல் தனியார் பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்களுக்கும் பூஜைகள் செய்து பலரும் வழிபட்டனர். இந்த நிலையில், சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் ஆயுத பூஜை கொண்டாடியாதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. சென்னையை பொறுத்தவரை புறநகர் ரயில்களில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். தினமும் அலுவலகம் செல்வோர், கல்லூரி மாணவ மாணவிகள் என பலதரப்பினருக்கும் வரப்பிரசாதமாக புறநகர் ரயில் உள்ளது.
ரயிலில் ஆயுத பூஜை
ஏனெனில் சென்னை போன்ற நகரங்களில் சாலைகளில் பயணித்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதனால், புறநகர் ரயில்களில் பயணிக்கும் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு வரும் ரயிலில் நண்பர்கள் குழு என்ற ஒரு குழுவினர் ஆயுத பூஜை கொண்டாடியதாக சர்ச்சை எழுந்தது.
பயணிகளுக்கு சுண்டல்
ரயில் பெட்டிகளை கலர் பேப்பர்களால் அலங்கரித்து சாமி படம் வைத்து வணங்கும் புகைப்படங்களும் சக பயணிகளுக்கு சுண்டல், வெல்லம், பொங்கல் வழங்கும் காட்சிகளும் வெளியாகின. இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. பொதுத்துறை நிறுவனத்திற்கு சொந்தமான ரயிலில் அனைத்து தரப்பு மக்களும் பயணிக்கின்றனர்.
விசாரணைக்கு உத்தரவு
அப்படி இருக்கும் போது ஆயுத பூஜையை கொண்டாடுவது எந்த வகையில் நியாயம் எனவும் சமூக வலைத்தளங்களில் சிலர் கேள்வி எழுப்பியதை காண முடிந்தது. இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு சென்னை கோட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.