தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்.. பணிகள் விறுவிறு.. மத்திய அரசு முதற்கட்ட நிதி ஒதுக்கீடு
சென்னை: தமிழகத்தில் அமைக்கப்பட உள்ள 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு முதற்கட்டமாக ரூ.137.16 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரி அமைக்க மத்தியஅரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து இங்கு இடங்களை தேர்வு செய்து புதிய மருத்துவக்கல்லூரிகளை அமைக்க ரூ.137.16 கோடி ரூபாய் மத்திய அரசு நிதியினை முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்துள்ளது.
மருத்துவர்கள் நியமனம்
தமிழக அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க நிலம் கையகப்படுத்துதல், மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் நியமித்தல் போன்ற பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.
மத்திய அரசு
இதனிடயே கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் மருத்துவக்கல்லூரி அமைக்க அண்மையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் ஒரே ஆண்டில் 9 அரசு மருத்துவக்கல்லூரிகள் தமிழகத்தில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2,925 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒன்பது மருத்துவக் கல்லூரிகளும் தமிழகத்தில அமைக்கப்பட உள்ளது.
23 உள்ளது
ஏற்கனவே தமிழகத்தில் 23 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ள நிலையில் புதிதாக 9 மருத்துவக்கல்லூரிகள் அதிகரிப்பதால் மொத்தம் 32 மருத்துவக்கல்லூரிகளாக உயர உள்ளது.
இங்குதான் சேர்க்கை
இந்தியாவில் மற்ற மாநில மருத்துவக் கல்லூரிகளில், ஒவ்வொரு வருடமும் மாணவர் சேர்க்கைக்கு 100 சீட்டுகள் ஒதுக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் 150 சீட்டுகள் ஒதுக்கப்படுகின்றது. ஆக மொத்தம் 1,350 இடங்கள் கிடைக்கும். இதில் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் 15 சதவிகிதம் அனைத்திந்திய ஒதுக்கீடு போக, மீதமுள்ள தமிழக மாணவர்களே படிப்பார்கள்.