தூவானம் தூவ தூவ.. மக்களே மழைக்கு ரெடியா? அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 7 மாவட்ட மக்களுக்கு மழை
சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கடைசியாக மாண்டஸ் புயல் கரையை கடந்த போது சென்னையில் மழை இருந்தது. பின்னர் வறட்சியான வானிலையே நிலவியது. கடும் குளிர் காரணமாக மக்கள் ஊட்டியில் இருப்பதைபோல உணர்ந்தனர். இந்நிலையில் புத்தாண்டு பிறந்த பின்னர் நேற்று(ஜன.07) மற்றும் அதற்கு முந்தைய நாளில் இரவில் மட்டும் லேசான தூறல் இருந்தது. இதனையடுத்து இன்று சென்னைக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை மட்டுமல்லாது தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது, "கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று தெரிவித்துள்ளார்.

வறண்ட வானிலை
மேலும், "இதர மாவட்டங்களை பொறுத்த அளவில் வறண்ட வானிலையே நிலவும். வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு இருக்கிறது. அதேபோல வரும் 9ம் தேதி அதாவது நாளை முதல் 11ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காலைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் இருக்கும்.

குளிர்
அதேபோல வட மாநிலங்களில் குளிர் 2-5 டிகிரி என இருந்தாலும் தமிழ்நாட்டில் 29-30 டிகிரி செல்சியஸ் வரை அதிகபட்சமாக வெப்பநிலை இருக்கும். குறைந்தபட்சமாக 23-24 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இன்று(ஜன.08) மன்னர் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வடகிழக்கு, கிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று மணிக்கு 40-45 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இந்நாட்களில் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்" என்று கூறியுள்ளார்.

மழை
அடுத்த மூன்று மணி நேரத்தை பொறுத்த அளவில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை என 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல குளிரை பொறுத்த அளவில் அடுத்த 8 நாட்களுக்கு சென்னையில் குளிர் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது ஜனவரி 15-16 தேதி வரையில் குளிர் தொடரும் எனவும் இமயமலையிலிருந்து இந்திய பெருங்கடலை நோக்கி நகர்ந்து வரும் குளிர்ந்த காற்றுதான் இதற்கு காரணம் என்றும் ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

வெப்பநிலை
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த அளவில் கொடைக்கானலில் குறைந்தபட்சமாக 8.6 டிகிரி செல்சியசும், உதக மண்டலத்தில் 7.1 டிகிரி செல்சிசும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல அதிகபட்சமாக காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தில் சுமார் 25.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications