கன்னியாகுமரியில் 3 மணி நேரத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - இன்று பள்ளிகளுக்கு எங்கெங்கு விடுமுறை
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கனமழையயின் காரணமாக கன்னியாகுமரி இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த், தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கரூர், சிவகங்கை, புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் காலை முதலே மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்தது. குறிப்பாக, வட தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக, பல்வேறு இடங்களில் அணைகள், ஏரிகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரண்டு நாள்களாக, மழை நின்றுள்ளதால் சென்னையில் சாலைகளில் தேங்கியிருந்த மழை நீர் வடியத் தொடங்கினாலும் சகதிகள்,குப்பைகள் நிறைந்துள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக கனமழை விடாமல் கொட்டி வருகிறது. காணும் இடமெங்கும் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது. குளங்கள், ஏரிகள் உடைந்து ஊருக்குள் வெள்ளநீர் பாய்ந்துள்ளதால் வீடுகளில் இருந்தவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமையன்று தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி அதே திசையில் பயணித்து அந்தமான் கடலோர பகுதிகளில் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்னிந்தியாவை நோக்கி பயணித்து செவ்வாய்கிழமையன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதற்கான சாத்தியம் உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
அந்தமானிலிருந்து தென்னிந்தியாவை நோக்கி தாழ்வுப் பகுதி வருவதால் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள் மற்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இருப்பினும், காற்றின் திசையை பொருத்து தாழ்வுப் பகுதி செல்லும் வழி மாறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
கனமழையின் காரணமாக கன்னியாகுமரி இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த், தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டத்தில் கனமழையில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள தற்காலிக அரசு நிவாரண முகமாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புழுதிவாக்கம், செம்மஞ்சேரி, கோவிலம்பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த மகளிர் உயர்நிலைப் பள்ளிகளிலும் மற்றும் செம்மஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியிலும் மழை நீரை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் இன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படுகிறது என செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவள்ளுர் மாவட்டத்திலும் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications