பேய் மழை.. வீடுகளுக்குள் பல அடி தேங்கிய வெள்ள நீர்.. த(க)ண்ணீரில் தத்தளிக்கும் செங்கல்பட்டு மக்கள்!
செங்கல்பட்டு: தமிழகம் முழுவதும் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதிலும் சென்னையிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் பலத்த மழை கொட்டியது.
இதனால் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டன. நாகர்கோவில், அதன் சுற்றுப்புற பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ளத்தால் சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து முடங்கியது.

கொட்டி தீர்த்த மழை
இந்த நிலையில் தமிழகத்தின் அனைத்து இடங்ளிலும் தற்போதும் கடும் மழை, வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. சென்னையில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இது தவிர தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலத்தின் பல பகுதிகளில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையின் புறநகர் மாவட்டமான செங்கல்பட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத மழை பெய்துள்ளது.

வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்
இதனால் ஒட்டுமொத்த செங்கல்பட்டு நகரமே இரண்டாவது நாளாக வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகிறது. கடந்த இரு நாட்களாக பெய்த மழையால் செங்கல்பட்டு-மதுராந்தகம் முக்கிய ஜிஎஸ்டி சாலையில் வெள்ளநீர் சூழ்ந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் வரதராசனார் வீதி வேதாசலம் நகர் ராட்டின கிணறு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் கடைகள், வீடுகளுக்குள் புகுந்து கடுமையான சேதத்தை விளைவிக்கிறது.

பல அடி அளவுக்கு வெள்ளநீ
இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இராட்டினகிணறு பகுதியில் இருந்து செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் வரை செல்லும் சாலையில் செல்ல கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பல இடங்ககளில் பல அடி அளவுக்கு வெள்ளநீர் தேங்கி நிற்கிறது. சில வீடுகளில் இருந்த பொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. செங்கல்பட்டு நகர பகுதிகளில் வடிகால் வாரியம் இல்லாத காரணத்தால் ஆண்டுதோறும் சிறு மழை பெய்தாலும் அதிக அளவு மழை நீர் தேங்கி பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைகின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை
இந்த ஆண்டு பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளதால் வெள்ள நீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. எனவே வடிகால்களை உடனடியாக தூர்வாரி வெள்ளநீர் வடிவதற்கான வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இ.சி.ஆர் செல்லும் சாலை
திருப்போரூர் ஒன்றியம் படூர், கேளம்பாக்கம், நாவலூர், செம்மேஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையால் ஆற்று வெள்ளம் போல் சாலையில் ஓடிக்கொண்டு இருக்கிறது, தொடர் மழையால் திருப்போரூர் முருகன் கோவிளிலிருந்து இ.சி.ஆர் செல்லும் பாதை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி அப்பகுதியில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டுள்ளது, இதேபோன்று கேளம்பாக்கத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications