அந்த ஆசிரியர் பெயர் ஜான்சன், ஜஹாங்கீர் என்றிருந்தால்? ரவி டூ எச்.ராஜா.. போட்டு தாக்கிய சு.வெங்கடேசன்
சென்னை: அசோக்நகர் அரசுப்பள்ளியில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வு குறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ட்வீட் ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளது, பலரது கவனத்தை பெற்று வருகிறது.
சென்னை அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், "மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும்" என்று மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில், நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியையும், பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகின்றன.

மகாவிஷ்ணு: அதாவது, மகாவிஷ்ணு என்பவர் இந்த சொற்பொழிவை நடத்தி வருகிறார்.. தற்போது, 2 அரசு பள்ளிகளில் இதனை நடத்தியிருக்கிறார்.. தன்னம்பிக்கை பேச்சு என்ற தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவை நடத்தியிருப்பதாக கண்டனங்கள் குவிந்துள்ளன.
கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் மகாவிஷ்ணு பேசியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.. யாருடைய அனுமதியில் இதுபோன்ற சொற்பொழிவாளரை அரசு பள்ளிகளுக்குள் அனுமதித்தார்கள்? என்று ஆசிரியர்களே கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மாணவிகள்: எனவே, இதுபோன்ற நிகழ்ச்சிகளைக் கண்டித்து, SFI எனப்படும் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், இன்று காலை அந்த பள்ளியின் திரண்டு கேள்விகளை எழுப்பினார்கள்.. நிகழ்ச்சிக்குக்கு யாரை கேட்டு ஏற்பாடு செய்யப்பட்டது? யார் ஏற்பாடு செய்தார்கள், ஏற்பாடு செய்தவர்கள் மீது இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று முழக்கமிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
வெங்கடேசன்: இந்த சம்பவத்திற்கு, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.. "பாஜக ஆளும் மாநிலம் ஒன்றில் ஓராண்டுக்கு முன் நாடாளுமன்ற கல்வி நிலைக்குழு ஆய்வு மேற்கொண்டோம். அங்கன்வாடி ஊழியர்கள் கிராமத்தில் உள்ள கோயில்களை தூய்மைப்படுத்தும் பணியும், அங்கு குழந்தைகளுக்கு போதிப்பதைப் பற்றியும் நாங்கள் கேள்வி எழுப்பினோம்.
அப்போது அந்த மாநிலத் தலைமைக் கல்வி அதிகாரி "கோயிலில் பாவ புண்ணியத்தைப் பற்றிப் போதிக்காமல் ஒருவனுக்கு வாழ்வியலை எப்படி போதிக்க முடியும்?" என்று கேட்டார்.
இன்று அதே கேள்வியை தமிழ்நாட்டு அரசுப் பள்ளியில் சிறப்பு விருந்தினராக வந்து ஒருவர் கேட்கிறார்.
மறுப்பு தெரிவிக்கும் ஆசிரியரைப் பார்த்து, "உங்கள் பெயரென்ன?" என்று கேட்கிறார்.
அந்த ஆசிரியரின் பெயர் ஜான்சன் ஆகவோ, ஜாஹீர் உசேனாகவோ இருந்திருந்தால் இன்று முதல் பள்ளிக் கல்வி பற்றிய பிரச்சனை ஆர். என். ரவியிடமிருந்து ஹெச். ராஜாவுக்கு மாற்றப்பட்டிருக்கும். அவர்கள் தெரிந்தே செய்கிறார்கள்.

எது "நன்நெறி" என்பதை தமிழ்நாடு அரசின் கல்வித்துறை செயலில் காட்ட வேண்டிய நேரமிது." என்று தன்னுடைய பதிவில் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்ததையடுத்து, சென்னை அசோக் நகர் பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அசோக் நகர் அரசுப்பள்ளியில் பிற்போக்கு சொற்பொழிவு ஆற்றிய மகா விஷ்ணு என்பவருக்கு சொந்தமான திருப்பூர் குளத்துப் பாளையம் பகுதியில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை மையத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். எனினும், சொற்பொழிவு என்ற பெயரில் நடந்த மூடநம்பிக்கை பேச்சின், காட்டமும், சலசலப்பும் இன்னும் குறையவில்லை.
முன்னதாக மகாவிஷ்ணு தன்னுடைய உரையில், "அரசுப் பள்ளியில் ஆன்மீகம் பேசக்கூடாது என்று யார் சொன்னது? அப்படி ஏதாவது சட்டம் இருக்கிறதா? இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறதா? முதன்மை கல்வி அலுவலரை விட நீங்கள் அறிவு பெற்றவரா? நீ அதிகமாக பாவம் செய்தால் மலத்தில் ஊறும் புழுவாக பிறப்பாய் என்று திருமூலர் திருமந்திரத்தில் எழுதுகிறார். திருமூலரை தாண்டி ஞானம் யாருக்காவது இருக்கிறதா? தெளிவு யாருக்காவது இருக்கிறதா?
உங்களுக்கு ஏன் இவ்வளவு பிரச்சனை? உண்மை என்றால் என்ன? தர்மம், சத்தியம் என்றால் என்ன? நியாயம், கருணை என்றால் என்ன? ஒரு மந்திரத்தை படித்தால் நெருப்பு மழை பொழியும். ஒரு மந்திரத்தை படித்தால் உடல் நோய் குணமாகும். இங்கிருந்து அங்கே பறந்து செல்ல முடியும். அத்தனையும் ரகசியங்களையும் பனை ஓலையில் முன்னோர்கள் எழுதி வைத்து விட்டுச் சென்றனர். ஆங்கிலேயர்களின் சதி வேலை காரணமாக நம் மக்களின் ஞானம் மண்ணோடு மண்ணாக புதைந்தது" என்றெல்லாம் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications