டேப் கொடுங்க.. வெளிநாடு டூர் அழைத்துப் போங்க! அடம்பிடித்த கவுன்சிலர்கள்! திகைத்துப் போன சென்னை மேயர்
சென்னை: சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் காகித பரிவர்த்தனையை குறைக்கும் நோக்கில் தங்களுக்கு டேப்லெட் வழங்குமாறு மாமன்றக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதேபோல் வெளிநாடுகளில் உள்ள 15 மாநகராட்சிகளுடன் 'சகோதரி திட்டத்தின்' கீழ் சென்னை மாநகராட்சி இணைந்துள்ளதால் அந்த நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பை கவுன்சிலர்களுக்கும் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இதென்னடா புது வம்பாக போச்சு என்கிற வகையில் இது குறித்து உறுதியான பதில் எதுவும் அளிக்காத சென்னை மேயர் ப்ரியா ராஜன் விஷயத்தை மேலிடத்துக்கு கொண்டு போயிருக்கிறாராம்.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்த ஜனவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் தருவது என மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே இக்கூட்டத்தில் கலந்துகொண்ட எழும்பூர் பகுதி கவுன்சிலர் ஃபாத்திமா முஸாபர், காலம் மாறி வருவதற்கு ஏற்ப வார்டு பிரச்சனைகள் பற்றி பதிவேற்றம் செய்ய தங்களுக்கு டேப்லெட் கருவி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

சகோதரி திட்டம்
மேலும், சகோதரி திட்டத்தின் கீழ் 15 வெளிநாடுகளில் உள்ள மாநகராட்சிகளுடன் சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளதால் அது தொடர்பான பணிகள், ஆய்வுகளுக்கு செல்லும் போது கவுன்சிலர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 61வது வார்டு கவுன்சிலர் ஃபாத்திமா முஸாபர் முன் வைத்த இந்த 2 கோரிக்கைகளையும் மிக கெட்டியாக பிடித்துக்கொண்ட மற்ற கவுன்சிலர்களும், வெளிநாடு டூர் அழைத்துப் போகுமாறு மேயரிடம் கோரஸாக கோரிக்கை வைத்தனர்.

வெளிநாடு சுற்றுப்பயணம்
இதனல் திகைத்துப் போன சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா ராஜன், கவுன்சிலர்களுக்கு டேப்லெட் வழங்கும் அளவுக்கு நிதி ஆதாரம் கிடையாது என்றும் வெளிநாடு சுற்றுப்பயணத்துக்கு எல்லா கவுன்சிலர்களையும் அழைத்துச் செல்வது சாத்தியப்படாது எனவும் தெரிவித்தார். குழுவில் ஓரிருவர் என்ற முறையில் வெளிநாடு ஆய்வு உள்ளிட்ட பணிகளுக்கு அழைத்துச் செல்லப்படும் எனக் கூறினார். ஆனாலும் அதை ஏற்க மறுத்த கவுன்சிலர்கள் பலர் தங்கள் கோரிக்கைகளில் விடாப்பிடியாக இருந்துள்ளனர்.

மேயர் ப்ரியா ராஜன்
இதனிடையே கவுன்சிலர்கள் விளையாட்டாக கேட்கிறார்களா அல்லது சீரியஸாகவே கேட்கிறார்கள் என்பது தெரியாமல் மாமன்றக் கூட்டத்தை ஒரு வழியாக சமாளித்து நடத்தி முடித்து மேயர் ப்ரியா ராஜன், இது தொடர்பான விஷயத்தை மேலிடத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications