சென்னைக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்.. மாநகராட்சி திட்டம்.. "வீக் என்ட்" கூட்டத்தால் அதிரடி முடிவு
சென்னை: கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, சென்னை மாநகராட்சி நகரில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறது.
கொரோனா இரண்டாவது அலை காலகட்டத்தின் போது, சென்னையில் மருத்துவமனைகளில் நோயாளிகள் சென்று சேர்வதற்கு போதிய படுக்கை வசதி இல்லாத அளவுக்கு கூட நிலவரம் போய்விட்டது. ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றால் பல நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
கர்நாடகாவை ஒப்பிட்டால், சுகாதாரப் பிரச்சினை தமிழ்நாட்டுக்கு குறைவுதான் என்ற போதிலும், அதுவரை பார்த்திராத அளவுக்கு நிலைமை மோசமாக போனது உண்மைதான்.

ஊரடங்கு தளர்வுகள்
இந்த நிலையில்தான் நோய் பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்நாடு முழுக்க இ பதிவு செய்யாமல் பயணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பேருந்து போக்குவரத்து துவங்கப்பட்டு இருக்கிறது. கோவை உள்ளிட்ட மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களிலும் கூட தற்போது இயல்பு நிலைமை திரும்பியிருக்கிறது. சென்னையை பொறுத்த அளவில் பல மாதங்களுக்கு பிறகு சில நாட்களுக்கு முன்பாக கொரோனாவால் ஒருவரும் இறக்கவில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டது.

தடுப்பூசி அதிகம் தேவை
அதேநேரம் நாட்டில் 50 சதவீதம் பேருக்கும் மேல் தடுப்பூசி போட்டால் தான் அடுத்ததாக ஒரு அலை வராமல் தடுக்க முடியும் என்பது சுகாதார வல்லுனர்கள் கணிப்பாக இருக்கிறது. ஆனால் போதிய அளவுக்கு தடுப்பூசிகள் இல்லாத காரணத்தால், இன்னமும் பெரும்பான்மையான மக்களால் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியவில்லை. எனவே சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் தடுப்பூசிகளை அதிகப்படுத்துவது ஆகிய பணிகளை செய்து முடிக்கும் வரை மூன்றாவது அலை வந்து விடக்கூடாது என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

சுய கட்டுப்பாடு அவசியம்
இருப்பினும் பல இடங்களிலும் தளர்வுகள் இருப்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்துச் செல்வதை பார்க்கமுடிகிறது. மூன்றாவது அலை வராமல் தடுக்க வேண்டும் என்றால் மக்கள் சுய கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுக்கும் அளவுக்கு நிலைமை போய் விட்டது. சென்னையும் இதற்கு விதிவிலக்கு கிடையாது.

வணிக வளாகங்களில் கூட்டம்
வார நாட்களில் பணி நிமித்தமாக மக்கள் வேலைகளை பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்பி விடுகிறார்கள். வார இறுதி நாட்களில் பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக கூடுகிறார்கள். தி.நகர் பகுதியில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் பிற பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டம் சேராமல் தடுக்க சில வழிகாட்டு நெறிமுறைகள் மாநகராட்சியால் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றாமல் வணிகத்துக்காக மக்களின் உயிரோடு விளையாடும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது மாநகராட்சி.

நிபந்தனைகள்
50% வாடிக்கையாளர்கள் மட்டும்தான் கடைக்குள் இருக்கவேண்டும், உள்ளே வருபவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் இருக்க வேண்டும், கை சுத்திகரிப்பான் வைத்திருக்கவேண்டும், பணியாளர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் இது ஏட்டளவில் இருக்கிறதே தவிர செயல்பாட்டில் பெரிய அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. எனவே கடைகள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், காய்கறி சந்தைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மக்களே உஷார்
மாநகராட்சி அதிகாரிகள் அதிக அளவுக்கு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே, விதிமுறைகளை மீறி மக்கள் கூட்டம் கூடிய நிறுவனங்களை சீல் வைக்கும் நிலைமை வரக்கூடும் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . மேலும் பல புதிய கெடுபிடிகளை கொண்டுவரவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதை உணர்ந்து மக்கள் கூடும் இடங்களில் வணிக நிறுவனங்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும், மக்களும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பது சுகாதார வல்லுனர்கள் கோரிக்கையாக இருக்கிறது. ஏனென்றால், மூன்றாவது அலை பரவும் முன்னால், அதன் பாதிப்புகள் மிக மோசமாக இருக்கும் என்று எச்சரிக்கிறார்கள் சுகாதாரத் துறை வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications