பெரும் அதிர்ச்சி.. சீனாவின் வுஹானை மிஞ்சியது சென்னை கொரோனா பாதிப்பு! அடுத்து என்ன செய்ய போகிறோம்?
சென்னை: சீனாவின் வுஹான் நகரத்தில் பதிவாகியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்புகளை விடவும் அதிகமாக சென்னையில் பாதிப்பு பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்தில், ஜனவரி மாதம் 14 ஆம் தேதி ஒரு வகை புதிய வைரஸ் பரவியிருப்பதும், அபாயகரமான வைரஸ் அது என்றும் அறிவிக்கப்பட்டது.
இது கொரோனா வைரஸ் வகையை சேர்ந்தது என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, ஒட்டுமொத்தமாக ஹூபே மாகாணம் முழுக்க முடக்கப்பட்டது. அங்கிருந்து வெளியே செல்வதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது.
தமிழகத்தில் மேலும் 3,713 பேருக்கு கொரோனா.. தொடர்ந்து 3ஆவது நாளாக உச்சத்தை தொடும் தொற்று
சென்னை vs வுஹான்
சென்னையில் இன்று ஓரே நாளில் 1,939 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 51,699ஆக அதிகரித்துள்ளது.
வுஹான் நகரில் மொத்த பாதிப்பு 50,333தான். உலகையே கவனத்தை ஈர்த்த வுஹானை விட, நமது தமிழகத்தின் தலைநகர் சென்னையில், நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதுவும், தினமும் சுமார் 10 ஆயிரம் என்ற அளவுக்கு மட்டுமே அங்கு பரிசோதனை செய்யப்பட்டும், இத்தனை நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
ஜனவரி மாதம்
இந்த வைரஸின் தலைநகரமாக கருதப்பட்டது, அந்த மாகாணத்தின், வுஹான் நகரம். அது முற்றிலும் சீல் செய்யப்பட்டது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் இருக்க அறிவிக்கப்பட்டனர். சுமார் ஒரு கோடி மக்கள் தொகையைக் கொண்ட பெரிய நகரம்தான் வூஹான். கிட்டத்தட்ட சென்னைக்கு ஈடானதுதான். இருப்பினும் அத்தனை பேரையும் வீட்டுக்குள் வைத்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வீடுகளுக்கே உணவு பொருட்களை கொண்டுசென்று கொடுத்து மிகத் திறமையாக சீன அரசு கையாண்டது.
இயல்பு நிலை
அதன் விளைவாக அங்கு வைரஸ் பாதிப்பு முடிவுக்கு வந்தது. வுஹான் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இத்தனைக்கும் டிசம்பர் மாதமே அங்கு சந்தேகத்துக்குரிய வைரஸ் பரவி உள்ளது. அது ஆய்வுகளுக்கு பிறகு ஜனவரி மாதம் தான், கொரோனா என்று தெரியவந்தது. அதற்குள்ளாக பலருக்கும் அது பரவியதால்தான் இத்தனை பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இது புதிய வகை வைரஸ் என்று கண்டறியப்பட்டதுமே, அரசு நடவடிக்கை எடுத்ததன் விளைவாக நிலைமை கட்டுக்குள் வந்தது.
சென்னை கோட்டைவிட்டது எங்கே?
சென்னையில் நிலைமை வேறு. ஏற்கனவே இந்த வைரஸ் தொடர்பாக விபரங்கள் அனைத்தும் அரசிடம் இருந்தன. சென்னையும் முழு லாக்டவுனுக்கு உட்படுத்தப்பட்டது. அப்படி இருந்தும் இங்கு தொடர்ச்சியாக வைரஸ் பாதிப்பு என்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நிர்வாகங்கள் சரியாக செயல்படவில்லை என்று குறை சொல்வதா, அல்லது இங்கு மக்கள் நிர்வாகங்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்று குறை சொல்வதா என்று தெரியாமல் அப்பாவி மக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.
ஒரே நோக்கம்
ஏற்கனவே, மும்பை நகரம் கடந்த 9ஆம் தேதி வுஹான் பாதிப்பு எண்ணிக்கையைவிட அதிகமாக வைரஸ் நோயாளிகளை பதிவு செய்தது. இப்போது சென்னையும் அந்த நிலையை அடைந்துள்ளது. இப்படியான ஒரு நிலைமை இருக்கும்போது தேர்வு நடத்தப் போகிறோம் என்ற அறிவிப்புகள், பள்ளிகள் திறக்கப்படும் என்ற பேச்சுக்கள் என பல களேபரங்களையும் நாம் பார்த்துள்ளோம் என்பது கவலை அளிக்கக்கூடிய ஒரு செய்திதான். இனிமேலாவது இதில் முழு கவனம் செலுத்தி வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி மக்களை காப்பாற்றுவதற்கு அனைத்து தரப்பு முயற்சி எடுக்க வேண்டியது அவசியம்.