ஒன்னும் இல்ல.. வீட்டுக்கு போங்க.. தொட்டு பார்க்காமலே சொல்லும் ஆஸ்பத்திரிகள்.. பாவம் சென்னைவாசிகள்
சென்னை: சென்னை அரசு மருத்துவமனைகளில், மருத்துவ பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனா தவிர்த்த பிற நோய் பிரச்சினைக்காக செல்வோரை பரிசோதிக்காமல் வீட்டுக்கு திருப்பி அனுப்புவதாக புகார்கள் எழுந்துள்ளன.
தொட்டுக் கூட பார்க்காமல், எந்தவித பரிசோதனையும் செய்யாமல், "நீங்கள் நன்றாகத்தான் இருக்கிறீர்கள் வீட்டுக்குச் செல்லுங்கள்" என்று அவசர அவசரமாக நோயாளிகளை வீட்டுக்குத் திருப்பி அனுப்புவதாக குமுறல்கள் அதிகரித்துள்ளன.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்த மிக மோசமான பகுதி சென்னை. மொத்த தமிழகத்தில் பாதிக்குமேல் பாதிப்புகள் சென்னை நகரில்தான் பதிவாகியுள்ளன. மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களும் நோய் தொற்றுக்கு எளிதாக ஆளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
796 கொரோனா நோயாளிகள்.. மருத்துவமனையிலிருந்து திடீரென முகாமிற்கு மாற்றம்.. சென்னையில் என்ன நடக்கிறது?
வீசிங்தான் பிரச்சினை
இந்த நிலையில்தான் மருத்துவ பணியாளர்களுக்கு இயல்பாகவே ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டுவிட்டது என்று தெரிகிறது. மதுரவாயல் பகுதியை சேர்ந்த ஒரு திருமணமான இளம்பெண் நம்மிடம் ஒரு இது தொடர்பான ஒரு தகவலை பகிர்ந்து கொண்டார். அந்தப் பெண்ணிற்கு நேற்று மாலை முதல் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வீசிங் பிரச்சினை இருப்பதால் அவர் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகியுள்ளார்.
பயம்தானாம்
ஆனால், மருத்துவமனையிலோ காத்திருந்தது அதிர்ச்சி. "ரொம்ப பேரு கொரோனா பயத்தால இப்படித்தான் சொல்லிகிட்டு ஆஸ்பத்திரிக்கு வர்றாங்க.. நீங்க டென்ஷன் ஆகாம வீட்டுக்கு போய் நிம்மதியா தூங்குங்கள்.." என்று கூறியுள்ளார் பணியிலிருந்த செவிலியர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண்ணின் கணவர். "அருகே இருந்து நானே அவர் படும் கஷ்டத்தை பார்த்து வருகிறேன்.. நீங்கள் என்னடா என்றால், அப்படியே திரும்பிப் போகச் சொல்கிறீர்களே" என உணர்ச்சிபொங்க பேசியுள்ளார்.
பார்க்காமலே முடிவுகள்
அப்போது அங்கு வந்த பெண் மருத்துவர் ஒருவர், நிலைமையை புரிந்து கொண்டு, அந்தப் பெண்ணை அழைத்து பரிசோதனை செய்து சில மாத்திரைகளை பரிந்துரைத்துள்ளார். இன்று அதிகாலை, மறுபடியும் அந்தப் பெண்ணுக்கு மூச்சு திணறல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே, காலையில் அதே அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். வரிசையில் காத்திருந்து பக்கத்தில் போனால், தொட்டுக் கூட பார்க்காமல் "நீங்க நல்லாத்தான் இருக்கீங்க.. திரும்பி போங்கள்" என்று செவிலியரிடமிருந்து பதில் வந்துள்ளது.
தனியார் மருத்துவமனைகள்
சரி தனியார் மருத்துவமனையில் சென்று பார்க்கலாம் என்றால், மூச்சுத்திணறல், சளி போன்ற பிரச்சினைகளுக்காக இங்கு வராதீர்கள், அரசு மருத்துவமனையை அணுகுங்கள் என்று மருத்துவமனைகளின் வெளியே நோட்டீஸ் எழுதி ஒட்டப்பட்டு இருக்கிறதாம். சென்னையில் உள்ள பெரும்பாலான தனியார் மருத்துவமனையில் இதுதான் நிலவரம். கணிசமான மருத்துவமனைகள் மூடப்பட்டிருக்கின்றன. அரசு மருத்துவமனைக்கு சென்றால், பார்க்காமல் திருப்பி அனுப்புகிறார்கள். தனியார் மருத்துவமனைகளும் மூடிக் கிடக்கின்றன. அல்லது.. வராதீர்கள் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்கின்றன என்று கூறுகிறார்கள் சென்னைவாசிகள். இது சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நமக்கு கிடைக்கக்கூடிய தகவல்தான்.
அச்சம்
அரசு மருத்துவமனைகளில், மருத்துவ பணியாளர்களுக்கும், நோயாளிகளுக்கும் குறுக்கே சுமார் 3 அடி தூரத்துக்கு பெஞ்ச் போடப்பட்டு நோயாளி பக்கத்திலேயே வராத அளவுக்கு தான் அச்சத்தோடு மருத்துவ பணியாளர்கள் அவர்களை பார்க்கிறார்கள். தொட்டுக் கூட பார்க்காமல் எப்படி ஒருவர் பிரச்சனையை மருத்துவர்களால் முடிவு செய்யமுடியும்? செல்லும் அனைவரும் கொரோனா நோயாளிகள் இல்லையே. வழக்கமாக அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சரி செய்ய என்னதான் வழி?