நிலத்தை அபகரிக்க.. மாணவிகளை தூண்டி விட்டு தன் மீது பொய் புகார்.. ஹைகோர்ட்டில் சிவசங்கர் பாபா வாதம்!
சென்னை: கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் தாளாளரான சாமியார் சிவசங்கர் பாபா பாலியல் வழக்கில் சிக்கி போக்சோ வழக்கில் செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நெல்லை: எட்டி உதைத்ததால் இடிந்து விழுந்த பள்ளி சுவர்? 3 மாணவர்கள் பலியான சம்பவத்தின் பரபர பின்னணி!
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியில் படித்தபோது சிவசங்கர் பாபா தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் அவர் மீது போக்சோ சட்டத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
சிறையில் அடைப்பு
முதலில் தமிழ்நாடு போலீஸ் விசாரித்த இந்த வழக்கு பின்னர் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. போலீசார் தேடுவதை அறிந்ததும் சிவசங்கர் பாபா தலைமறைவானர் . இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் ஜூன் 16 ஆம் தேதி டெல்லியில் அவரை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
ஏற்கனவே ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
சிவசங்கர் பாபாவின் அறையில் நடத்தப்பட்ட சோதனையில் கணினி, லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதேபோல் இந்த வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்ற சுஷில் ஹரி பள்ளியின் ஆசிரியர்களான தீபா உட்பட 4 ஆசிரியர்களை நேரில் வரவழைத்து விசாரணையும் நடத்தினர்.
சிவசங்கர் பாபா தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 2 மனுக்கள் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டன.
மீண்டும் மறுப்பு
இதேபோல் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் பாலியல் வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுத்து விட்டது.
பரபரப்பு வாதம்
பல மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் ஜாமீன் கோரி சிவசங்கர் பாபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதி தமிழ்ச்செல்வி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான கேளம்பாக்க நிலத்தை அபகரிக்கும் நோக்கில், பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவிகளை தூண்டி விட்டு இந்த பொய் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், நிரந்தரமாக நீதிமன்ற காவலில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பொய் வழக்குகள் பதியப்படுவதாகவும் சிவசங்கர் பாபா தரப்பில் வாதிடப்பட்டது.
விசாரணை ஆரம்ப கட்டத்தில்
இதனை தொடர்ந்து காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிகர் வாதாடுகையில், ' சிவசங்கர் பாபாவுக்கு எதிராக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருப்பதாகவும், நேற்று கூட ஒரு புகார் அளிக்கப்பட்டு, அதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிவசங்கர் பாபா மாணவிகளுடன் இருந்த புகைப்படங்களையும், அவர் மாணவிகளுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளையும் தாக்கல் செய்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், விசாரணை ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது என்பதால் ஜாமீன் வழங்க கூடாது என்றார்.
மார்பிங் செய்யப்பட்டவை
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த சிவசங்கர் பாபா தரப்பு வழக்கறிஞர், இந்த புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டவை என்றும், மனுதாரருக்கு 73 வயதாகி விட்டது என்றும் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாமியார் என கூறிக்கொள்ளும் மனுதாரருக்கு எதிரான புகார்களின் தன்மை, குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை கருத்தில் கொண்டும், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் அவர் தலைமறைவாக வாய்ப்பு உள்ளது என்பதாலும், ஜாமீன் வழங்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.