தங்க நகை அணிந்து கொண்டு வெளிநாட்டிலிருந்து வந்தாலே சுங்க வரி உண்டு! ஹைகோர்ட்
சென்னை: வெளிநாட்டில் இருந்து வருவோர் தங்க நகை அணிந்து வந்தால் சுங்க வரி உண்டு என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இரு வேறு வழக்குகளில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மேற்கண்ட ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.
சென்னையை சேர்ந்தவர் சபீனா முகமது மொய்தீன். இவர் ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுவிட்டு அபுதாபியில் இருந்து கடந்த 2023ம் ஆண்டு சென்னை விமான நிலையத்திற்கு குடும்பத்தினருடன் வந்தேன்.

அப்போது நான் கையில் அணிந்திருந்த 135 கிராம் எடை கொண்ட 10 தங்க வளையல்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சுங்க வரியாக ரூ 7.60 லட்சம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். எனவே அந்த தங்க வளையல்களை திரும்ப ஒப்படைக்க சுங்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் சபீனா கோரிக்கை விடுத்துள்ளார்.
அது போல் இலங்கையை சேர்ந்த தனுஷிகா என்பவருக்கும் பிரான்ஸில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த ஜெயகாந்த் என்பவருக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு மதுராந்தகத்தில் திருமணம் நடந்தது.
கடந்த டிசம்பரில் தனுஷிகா தனது மாமியார், நாத்தனார் உள்ளிட்ட உறவினர்களுடன் பிரான்ஸ் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.
அப்போது தனுஷிகாவின் கழுத்தில் இருந்த தங்க தாலி சங்கிலி கூடுதல் எடையுடன் இருப்பதாக கூறி, பெண் சுங்கத் துறை அதிகாரியான மைதிலி அதை பறிமுதல் செய்தார். இது குறித்து தனுஷிகா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த இரு வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி என்பவர் தங்க நகைகளை அவர்கள் மறைத்து எடுத்து வரவில்லை, உடலில் அணிந்திருக்கும் நகைகளை உடைமைகளாக கருதி சுங்க வரி விதிக்க முடியாது. அவற்றை திருப்பி ஒப்படைக்க வேண்டும்.
பெண்ணின் தாலி சங்கிலியை பறித்ததை சகித்து கொள்ள முடியாது என கூறிய நீதிபதி, தாலியை பறித்த சுங்கத் துறை பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களது நகைகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சுங்கத் துறை சார்பில் மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சி.சரவணன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சுங்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜரானார். அவர் தனது வாதத்தில் பேக்கேஜ் விதிகளின்படி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு வரப்படும் பொருட்கள், உடைமைகளாகக் கருதப்பட்டு வரி வசூலிக்கப்பட வேண்டும்.
உடலில் அணிந்துள்ள நகைகளை உடைமைகளாக கருத முடியாது என்ற உத்தரவை ஏற்றால் அது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
சுங்கத் துறை வழக்கறிஞரின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை பிணை அல்லது உத்தரவாதம் பெற்று திரும்ப வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications