ஜாபர் சாதிக் தரப்பு வைத்த பரபர வாதம்.. அமலாக்கத்துறைக்கு உத்தரவு போட்ட சென்னை ஐகோர்ட்!
சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை கடத்தியதாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 9 ஆம் தேதி கைது செய்தனர்.

இது தொடர்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும், வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் கைது செய்த தன்னை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததால், தன்னை கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், போதைப்பொருள் கடத்தில் வழக்கில் ஜாபர் சாதிக் ஏற்கனவே சிறையில் இருந்ததால் உடனடியாக அவரை காவலில் எடுக்க முடியவில்லை எனவும் அதன் பின்னர் சிறை மாற்ற உத்தரவு பெற்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜாபர் சாதிக் தரப்பு மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ராஜரத்தினம், போதைப்பொருள் வழக்கில் ஜாமின் வழங்கப்பட்டு சிறையில் இருந்து வெளியில் வர இருந்த நிலையில் திகார் சிறை நிர்வாகம் அளித்த சிறை மாற்ற உத்தரவு காலாவதியாகிவிட்டதாக கூறினார்.
அவ்வாறு காலாவதியான சிறை மாற்ற உத்தரவு மூலம் ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை காவலில் எடுத்தது செல்லாது என வாதிட்டார். இதனையடுத்து, ஜாபர் சாதிக் மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதனிடையே, ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது தொடர்பாக அவரது தந்தை அப்துல் ரஹ்மான் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தொடர்பாகவும் அமாலக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் ஜூலை 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications