கோயம்பேட்டில் அலை மோதிய கூட்டம்.. ஏன் இப்படி மக்களே.. நேற்றைய தவறுக்கு யார் காரணம்?
சென்னை: 144 தடை உத்தரவு இன்று முதல் அமலாகவுள்ள நிலையில், மக்கள் பலர் சொந்த ஊருக்கு செல்ல கூட்டம் கூட்டமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று குவிந்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொரோனா பரவுவதை தடுக்க அரசு எத்தனையோ விழிப்புணர்வுகளை செய்து வந்த நிலையில், அத்தனை விஷயங்களையும் பாழாக்கும் வகையில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. இதன் விளைவுகள் இனி தான் தெரியும். இந்த சம்பவத்திற்கு மக்களை மட்டும் குறை சொல்ல முடியாது.. அரசும் கூடுதல் கவனத்துடன், சுதாரிப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவுவதை தடுக்க அரசு சமூகத்தினரிடையே தனிமைப்படுத்தி இருக்க வைப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் தொடங்கி ஏப்ரல் 1ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்க முக்கிய காரணம் பொதுமக்கள் விலகி இருக்க வேண்டும் என்பதற்கு தான். தற்போதைய நிலையில் ஸ்டேஜ் 2 என்ற நிலை தான் தமிழகத்தில் உள்ளது. அதாவது வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு, அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களுக்கு தான் பரவி வருகிறது.
மக்கள் கூடினார்கள்
அதன்பிறகு பரவியவர்கள் மூலம் பொதுமக்களுக்கு பரவும் ஸ்டேஜ் தான் 3வது ஸ்டேஜ். இந்த நிலை தமிழகம் எட்டிவிடக்கூடாது என்பதற்காகத்தான் சந்தேகப்படும் அத்தனை பேரையும் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைத்து வருகிறது தமிழக அரசு. ஆனால் அரசின் அத்தனை முயற்சிகளையும் பாழாக்கும் வகையில் நேற்று கோயம்பேட்டில் பல்லாயிரம் மக்கள் கூடினார்கள். அதில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு அறிகுறி இருந்தாலே பலருக்கு பரவி விடும் அபாயம் உள்ளது. இதை உணராமல் மக்கள் ஏன் இப்படி பொது இடத்தில் குவிந்தனர் என்பது அதிர்ச்சியாக உள்ளது.
கவனிக்க தவறியது
அரசுக்கும் இந்த சம்பவத்தில் முழு பொறுப்பு உள்ளது. ஏனெனில் 144 தடை உத்தரவு பிறப்பித்த அரசு, பேருந்துகளை அடியோடு குறைக்காமல் வழக்கம் போல விட்டிருக்கலாம். காரணம் எப்படியும் சொந்த ஊர்களுக்குச் செல்ல பலர் முயற்சிப்பார்கள். இதை அரசு ஊகித்திருக்க வேண்டும். வழக்கம் போல பேருந்துகளை விட்டிருந்தால் இந்த அளவுக்கு பிரச்சனைகள் எழுந்திருக்காது. அதேசமயம், மக்கள் விலகி இருக்க வேண்டும் என்று அரசு சொன்ன அறிவுரையை மக்கள் ஏற்பார்கள் என்ற நம்பியது அரசு. இதனால் தான் இப்படி ஒரு கூட்டத்தை அரசு எதிர்பார்க்கவில்லை.
வேலையில்லை
நேற்று ஊர்களுக்கு கிளம்பிப் போனவர்களில் பலர் சென்னையில் வேலைக்காக வந்து தங்கியிருந்த சாமானிய மக்கள் தான். திருவண்ணாமலை, விழுப்புரம் என அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான் பெரும்பாலானோர் இருப்பார்கள். வேலை இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தான் சொந்த ஊருக்கு கிளம்பி செல்லும் முடிவுக்கு வந்துள்ளனர். எப்படி அண்மையில் திருப்பூரிலும், சென்னையிலும் மொத்தமாக வடமாநிலத்தவர்கள் ரயிலில் அடித்துபிடித்து கிளம்பி சென்றார்களோ அது போல் தான்.
21000 பேருந்துகள் இல்லை
ஆனால் அப்படி கிளம்பி போன மக்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. கொரோனா அச்சம் காரணமாக தமிழகம் முழுவதும் சுமார் 21 ஆயிரம் பேருந்துகள் நேற்று இயக்கப்படவில்லை. கால் டாக்ஸி சேவைகள் இல்லை. ரயில்கள் இல்லை. ஆட்டோக்களும் இயங்கவில்லை. மிககுறைந்த அளவில் தான் பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன. நேற்று செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சோதனைச் சாவடியிலும் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி கிடைத்த வாகனத்தில் ஏற்றி அனுப்பியதைக் காண முடிந்தது.
உடனே குவிந்த மக்கள்
144 தடை உத்தரவை நேற்று முதல்வர் பழனிச்சாமி நேற்று மதியம் அறிவித்த நிலையில், உடனே பலரும் சொந்த ஊருக்கு சென்றுவிட வேண்டும் என கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு குவிய தொடங்கினர். ஆனால் போதிய பேருந்துகள் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆம்னி பேருந்துகளும் நிரம்பி வழிந்தன. நிலைமை மோசமாகி கொண்டே சென்றது. இதையடுத்த நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர சென்னையில் இயக்கப்பட்டு வந்த எம்டிசி பேருந்துகளை வெளியூர்களுக்கு இயக்கி மக்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். செவ்வாய் கிழமை மாலை வரை கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
பீதியில் செய்வது விபரீதமாகும்
ஆனால் மக்கள் நேற்று பெரும் தவறு செய்து விட்டனர். முன்கூட்டியே அவர்கள் கிளம்பிப் போயிருக்க வேண்டும். நேற்று வந்து மொத்தமாக குவிந்ததன் மூலம் அவர்களுக்கே அவர்கள் பாதகம் செய்தது போலாகி விட்டது. விலகி இருந்தல், கூட்டமாக கூடாதீர்கள் என்று அரசு சொன்ன எதையும் பின்பற்றவில்லை என்பது தெரிகிறது. ஆபத்தை உணராமல் மொத்தமாக மக்கள் பயணித்துள்ளார்கள். இவர்களில் யாருக்காவது பாதிப்பு இருந்து, அது பரவினால் என்ன ஆகும் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இனிமேலாவது வீடுகளை விட்டு வராமல் இருந்தாக வேண்டியதன் அவசியத்தை, கட்டாயத்தை மக்கள் உணர வேண்டும்.