வேகமெடுத்த மதுரவாயல்-துறைமுகம் இரண்டு அடுக்கு மேம்பால சாலை திட்டம்.. தூண்களை இடித்து தள்ள முடிவு
சென்னை: துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு மேம்பால திட்டத்துக்காக ஏற்கனவே அமைக்கப்பட்ட தூண்களை இடிக்கப்போவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
சரக்குகளை ஏற்றிவரும் வாகனங்கள் சென்னையின் கடும் போக்குவரத்து நெரிசலை கடந்து துறைமுகத்துக்கு செல்வதில் பல ஆண்டுகளாக சிரமம் இருந்து வந்தது.
இதனால் சரக்கு வாகனங்கள் சென்னை துறைமுகத்துக்கு செல்லாமல் ஆந்திராவில் உள்ள துறைமுகங்களை நாட தொடங்கியதால் தமிழ்நாட்டிற்கான வருவாய் பாதிக்கப்பட்டது.

திட்டம் போட்ட கருணாநிதி அரசு
இதனை தவிர்க்க கடந்த 2010 ஆம் ஆண்டு அப்போது முதலமைச்சராக கருணாநிதி தலைமையிலான திமுக அரசு மதுரவாயல் முதல் எண்ணூர் துறைமுகம் வரை ரூ.1,815 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்தது. இதற்கான பணிகள் உடனுக்குடன் தொடங்கப்பட்டு மேம்பாலத்துக்கான தூண்களும் மதுரவாயல் பகுதிகளில் அமைக்கப்பட்டன.

திட்டத்தை நிறுத்திய ஜெயலலிதா அரசு
இதனிடையே கூவம் ஆற்றில் தூண்கள் அமைப்பதால் சுற்றுச்சூழல் பிரச்சனை ஏற்படும் எனக்கூறி 2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, எண்ணூர் - மதுரவாயல் மேம்பால திட்டத்தை கிடப்பில் போட்டது.

விளம்பர தூண்களான மேம்பால தூண்கள்
திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணூர் - மதுரவாயல் மேம்பாலத்துக்காக அமைக்கப்பட்ட தூண்கள் நோட்டீஸ் ஒட்டுவதற்கும் விளம்பர போர்டுகள் வைப்பதற்குமே பயன்பட்டு வருகின்றன. சென்னையின் அடையாளமாகவே இந்த தூண்கள் மாறிவிட்டன. போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்த இந்த தூண்களின் மேல் எப்போது மேம்பாலம் வரும் என பொதுமக்கள் வழிமேல் விழி வைத்து காத்திருந்தனர்.

இரட்டை மேம்பால திட்டம்
இந்த நிலையில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த பாதையில் இரட்டை மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்தார். இந்த திட்டத்திற்கு ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒப்புதல் வழங்கியதை அடுத்து முதல்கட்ட தயாரிப்புப் பணிகளில் நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டு வருகிறது.

ரூ.5,965 கோடி மதிப்பில் மேம்பாலம்
20.5 கி.மீ. தொலைவுக்கு ரூ.5,965 கோடி மதிப்பில் இந்த மேம்பாலம் அமைக்க திட்டம் தீட்டப்பட்டு அதற்கான பணிகளில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் மண்டல அதிகாரி எஸ்.பி.சோமசேகர் தெரிவிக்கையில், "20.5 கி.மீ. மேம்பாலம் 9 கி.மீ. தூரம் சென்னை சூவம் நதி வழியாக செல்லும்." என்றார்.

தூண்களை இடிக்க திட்டம்
"இந்த கூவம் நதியோரம் பழைய மேம்பால திட்டத்துக்காக அமைக்கப்பட்டு உள்ள தூண்களை இடித்துவிட்டு புதிய தூண்களை கட்ட திட்டமிட்டு இருக்கிறோம். தற்போதைய இரட்டை அடுக்கு மேம்பால திட்டத்துக்கு அவை உகந்தது அல்ல. ஏற்கனவே 125 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 110 தூண்கள் இடிக்கப்படாது. புதிய தூண்கள் அமைப்பதற்காக சுற்றுச்சூழல் துறை மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதியை பெற வேண்டும்" என்றார்












Click it and Unblock the Notifications