வரதட்சிணை கொடுமை.. புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை.. கணவர், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை
சென்னை: வரதட்சணை கொடுமை காரணமாக புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவருக்கும், மாமியாருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை கிண்டி சதானிபேட்டையைச் சேர்ந்தவர் பார்த்திபன் என்பவருக்கும், திருவண்ணாமலையைச் சேர்ந்த சுகன்யா என்பவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த 3 மாதத்தில் இருந்து வரதட்சணை கேட்டு சுகன்யாவை, பார்த்திபனும், அவரது தாய் பத்மாவும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் மனம் உடைந்த சுகன்யா 2012 பிப்ரவரி 20ம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபன், பத்மா ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி முகமத் பாரூக், குற்றம்சாட்டப்பட்ட பார்த்திபன், பத்மா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
கடந்த சில காலமாக வரதட்சிணை கொடுமைகள் அதிகரித்து அதனால் தற்கொலைகளும், கொலைகளும் ஏற்படுகின்றன. குற்றங்கள் குறைய தண்டனைகள் அதிகரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications