6 மாவட்டங்களில் கனமழை..தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க முடியுமா?..வானிலை மையம் சொன்ன குட்நியூஸ்
சென்னை: நீலகிரி, ஈரோடு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை விடைபெற்றுள்ளது. வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. தென்மேற்குப் பருவமழை கொட்டித்தீர்த்ததில் அணைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம், உசிலம்பட்டி சாத்தூரில் 6 செமீ மழை பதிவாகியுள்ளது.
தீபாவளி பண்டிகை நாளில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அந்த புயல் தமிழகத்தை தாக்குமா? மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் வானிலை ஆய்வு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
நேற்று அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று காலை அக்டோபர் 22ஆம் தேதி 0830 மணி அளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில், போர்ட் பிளேர்க்கு, மேற்கு- வடமேற்கு திசையில் 110 கிலோ மீட்டர் தொலைவிலும், சாகர் தீவுக்கு தெற்கு- தென்கிழக்கு திசையில் 1460 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

புயல் உருவாகும்
இது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 23ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். பின்னர் வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 24ஆம் தேதி காலை புயலாக வலுபெறக்கூடும். அதன் பின்னர் வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 25ஆம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையை கடக்கும்.

6 மாவட்டங்களில் கனமழை
இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் மழை
நாளை முதல் 26ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

வெயில் சுடுமாம்
அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். தமிழக கடலோரப்பகுதிகளில் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications