கிளம்பிய தீப்பொறி.. பூந்தமல்லி ரூட்டில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் 'திடீர்' நிறுத்தம்
சென்னை: சென்னையில் இரண்டாம் கட்டமாக மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து வரும் நிலையில் இன்று பூந்தமல்லி முதல் முல்லைத்தோட்டம் வரையிலான 2.5 கிமீ தூரத்துக்கு ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட இருந்தது. இந்த சோதனை ஓட்டத்திற்கு முன்பாக திடீரென மின் வயரில் தீப்பொறி ஏற்பட்டதால் சோதனை ஓட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
சென்னை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக புறநகர் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் சேவையை பொருத்தவரை சென்னையில், முதல் கட்ட மெட்ரோ திட்டத்தில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை முதல் சென்னை செண்ட்ரல் வரையிலும் என இரண்டு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் சுமார் 3.1 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்கிறார்கள். தற்போது சென்னையில் இரண்டாம் கட்டமாக மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டு அதன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 118.9 கி.மீ நீளத்தில் 128 ரயில் நிலையங்களுடன் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டில் இந்த பணிகள் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 80 சதவிகிதம் முடிந்துள்ளது.
இதில் பூந்தமல்லி பைபாஸ் முதல் கலங்கரை விளக்கம் இடையேயான வழித்தடத்தில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இதில், பூந்தமல்லி முதல் முல்லைத்தோட்டம் வரையிலான 2.5 கிமீ தூரத்திற்கான தண்டவாளம் அமைக்கும் பணிகள் முழுவதுமாக முடிந்துள்ளது. இதன்பின்னர் இன்று இங்கு சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்பேரில் 3 பெட்டிகள் கொண்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்துக்கு தயாராக வந்தது.
முன்னதாக இன்று 5 மணிக்கு சோதனை ஓட்டம் தொடங்குவதாக கூறப்பட்டது. மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்குவதற்கு முன்பாக அந்த வழித்தடத்தில் தண்டவாளத்தில் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனை செய்யும் வாகனத்தில் தண்டவாளத்தில் மின் இணைப்பு, சென்சார்கள் உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டது. எனினும் மாலை 6 ஆகிய பின்னரும் அங்கு சோதனை ஓட்டம் நடத்தப்படவில்லை.
இதையடுத்து தான் சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஓட்டுநரே இல்லாமல் சென்சார் மூலமாக செல்லும் நடத்தப்பட இருந்த முதல் கட்ட சோதனைக்கு முன்பே தண்டவாள மின் வயரில் திடீரென்று தீப்பொறி கிளம்பியுள்ளது என்றும், இதன் காரணமாகவே இந்த சோதனை ஓட்ட பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மின் வயரில் எப்படி தீப்பொறி ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ரயில்வே தரப்பில் கூறுகையில், "சென்னை பூந்தமல்லியில் இருந்து முல்லைத்தோட்டம் வரையிலான 2 கிமீ தூரத்துக்கு இன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட இருந்தது. இந்த சோதனை ஓட்டத்திற்கு முன்னதாக மின்வயரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு தீப்பொறி கிளம்பியிருக்கிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக சோதனை ஓட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் மீண்டும் சோதனை ஓட்டம் நடத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications