ஹாரனில் கை வைத்தால் சிவப்பு சிக்னல் மாறாது.. சென்னை சிக்னல்கள் மொத்தமாக மாறுதே.. இதுதான் ரூல்ஸ்
சென்னை: ஒலி மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகச் சென்னை சிக்னல்களில் புதிய நடைமுறையைப் பின்பற்றச் சென்னை டிராபிக் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த நடைமுறையின் கீழ் சிக்னல்களில் ஹாரன் சத்தம் அதிகமாக இருந்தால் சிவப்பு சிக்னல் மாறாதாம். அமைதியாக இருந்தால் மட்டுமே பச்சை சிக்னல் விழுமாம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது இந்த பூமி பல்வேறு மாசுகளால் தொடர்ச்சியாகப் பாழடைந்து வருகிறது. இதில் சில மாசு வகைகளை நம்மால் தடுக்க முடியாது என்ற போதிலும் பல விஷயங்களை நம்மால் தடுக்க முடியும்.

இருப்பினும், மாசுபாடுகளைத் தடுக்க பெரிதாக எதுவும் செய்வதாகத் தெரியவில்லை. இதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை விட அதிக வெப்பமானதாகவும், அதிக புயல்களைக் கொண்டதாகவும் மாறி வருகிறது.
ஒலி மாசு: இப்போது காற்று மாசு, நீர் மாசு குறித்தாவது ஓரளவுக்கு விழிப்புணர்வு இருக்கிறது. ஆனால், ஒலி மாசு குறித்து பெரும்பாலும் யாருக்கும் விழிப்புணர்வே இல்லை. ஒலி மாசு என்பது நமது அன்றாட வாழ்க்கையில் வரும் தேவையில்லாத மற்றும் அதிகப்படியான இரைச்சலாகும். இந்த ஒலி மாசு குறித்து பெரிய விழிப்புணர்வு இல்லை என்ற போதிலும் இதில் மிக மோசமான நீண்ட கால பாதிப்புகள் ஏற்படவே செய்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைச் சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் தான் இந்த ஒலி மாசு அதிகமாக இருக்கிறது. முதற்கட்டமாக ஒலி மாசு குறித்து சென்னையில் ஆய்வு நடத்த அனுமதி தரப்பட்டுள்ள நிலையில், அதைத் தடுக்கவும் இப்போது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நடவடிக்கை: முதற்கட்டமாகச் சென்னையில் ₹50 லட்சம் செலவில் சென்சார் உதவியுடன் எங்கெல்லாம் இரைச்சல் அதிகமாக இருக்கிறது என்பது மேப்பிங் செய்யப்படும். நகரங்களில் மக்கள் தொகை அதிகரிக்கும் நிலையில், வாகன பயன்பாடும் அதிகரிக்கிறது. வாகனங்களில் இருந்து வரும் ஹாரனே ஒலி மாசுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
மேலும், தொழிற்சாலைகள், கட்டுமான பணிகள் காரணமாகவும் ஒலி மாசு மோசமாக இருக்கிறது. இந்த நடவடிக்கைகளில் இருந்து வெளிப்படும் சத்தம் மனித ஆரோக்கியம் மற்றும் உளவியல் நல்வாழ்வில் தீங்கு விளைவிக்கும். இவற்றில் இருந்து தொடர்ச்சியாக வெளிவரும் இரைச்சலால் நமது உடல்நிலை பாதிக்கப்படும். மேலும், இதனால் மன ரீதியான பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு அதிகமாம்.
ரூல்ஸ் என்ன: தமிழ்நாட்டில் உள்ள விதிகளின்படி பொதுவாக ஒரு நகரம் தொழில்துறை பகுதி, வணிக பகுதி, குடியிருப்பு பகுதி மற்றும் அமைதியான மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டும். இந்த பகுதிகளில் எந்தளவுக்குச் சத்தம் கேட்கலாம் என்பதற்கு விதி இருக்கும். பகல் (காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை) மற்றும் இரவு (இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை) என்று இரண்டு விதமான ஒலி கட்டுப்பாடுகள் இருக்கும்.
அதேநேரம் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், மத வழிபாட்டுத் தலங்களைச் சுற்றிய இடங்கள் அமைதி மண்டலமாக வகைப்படுத்தப்படும். இந்த இடங்களில் 100 மீட்டர் சுற்றளவில் அமைதி மண்டலம் இருக்கும். இந்த விதிமுறைகள் பேப்பரில் தெளிவாக இருந்தாலும், இவை நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்கிடையே ஒலி மாசை கட்டுப்படுத்த இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
புதிய திட்டம்: மேலும், சாலைகளில் சிக்னலில் இருக்கும் போது தான் ஹாரன் உச்சத்தில் இருக்கும். சிவப்பு சிக்னல் இருக்கும் போதே பலரும் ஹாரனை அடிக்க தொடங்கிவிடுவார்கள். இதைத் தடுக்க 'Punishing Signals' என்ற முறையைக் கொண்டு வரவும் சென்னை டிராபிக் போலீஸ் திட்டமிட்டு வருகிறதாம். ஏற்கனவே மும்பை உள்ளிட்ட நகரங்களில் இத்திட்டம் அமலில் உள்ளது.
அதாவது சிக்னல்களில் டெசிபல் மீட்டர் பொருத்தப்படும். அவை ஒலியின் அளவை தொடர்ந்து கணிக்காணிக்கும். குறிப்பிட்ட அளவை தாண்டி ஹாரன் சத்தம் கேட்டால் சிவப்பு சிக்னல் மாறாதாம். கவுண்டு டவுன் மீண்டும் ஆரம்பிக்கும். மற்றொரு முறை அது முடியும் வரை நாம் காத்திருக்க வேண்டும். எப்போது ஹாரன் சத்தம் குறைவாக இருக்கிறதோ, அப்போது தான் பச்சை சிக்னல் மாறுமாம். இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தால் ஒலி மாசு குறையும் என்கிறார்கள்.. நீங்க என்ன சொல்றீங்க.












Click it and Unblock the Notifications