வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை.. தமிழக பார் கவுன்சில் சென்னை கமிஷனருக்கு முக்கிய கோரிக்கை
சென்னை: வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை விதித்து காவல்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை நெம்பர் பிளேட்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பார் கவுன்சில் தரப்பில் வழங்கப்பட்ட ஸ்டிக்கர் பயன்படுத்துவதை தடுக்க கூடாது என தமிழ்நாடு புதுவை பார் கவுன்சில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளது.
சொந்த வாகனங்களில் ஊடகம், காவல்துறை, நீதித்துறை, வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டினால் மோட்டார் வாகன சட்டத்தின் 198 வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை போக்குவரத்து போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் வழக்கறிஞர்கள் பற்றிய குறிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்கனவே கேட்டுக்கொண்டிருந்தது.
இதுகுறித்து தமிழ்நாடு புதுவை பார் கவுன்சில் தலைவர் பி்.எஸ். அமல்ராஜ், சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், போலி வழக்கறிஞர்களை தடுக்க, வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் சார்பில் ஸ்டிக்கர் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
வாகனத்தினுடைய ஆர்சி புக், இன்சூரன்ஸ், வழக்கறிஞர் பதிவு ஆகிய ஆவணங்களின் அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்து பின்னரே ஸ்டிக்கர் வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார் ..
மேலும் காவல்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ள மோட்டார் வாகன சட்டப்பிரிவுகள் 177 மற்றும் 198 நம்பர் பிளேட் குறைபாடு தொடர்பானது மட்டுமே என்றும், அந்த விதிகளை பயன்படுத்தி வழக்கறிஞர்கள் ஸ்டிக்கர் ஒட்டுவதை தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே தமிழ்நாடு புதுவை பார் கவுன்சில் வழங்கியுள்ள ஸ்டிக்கரை பயன்படுத்தக்கூடிய வாகனங்களை தடுக்க கூடாது தொந்தரவு செய்யக்கூடாது என்றும் அவர் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications