'1000 மிமீ மழை..' 200 ஆண்டுகளில் இது தான் அதிகம்.. புதிய சாதனை படைக்கப் போகும் சென்னை மழை
சென்னை: தலைநகர் சென்னையில் கனமழை கொட்டித்தீர்க்கும் நிலையில் இந்த மாதம் மட்டும் 1000 மிமீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 200 ஆண்டுகளில் 3 முறை மட்டுமே ஒரு மாதத்தில் இந்தளவுக்கு மழை பெய்துள்ளது.
Recommended Video
தலைநகர் சென்னையில் இந்த மாதம் முதலே கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் நகரில் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இந்த மழையால் முக்கிய நீர் ஆதாரங்கள் நிரம்பியுள்ள போதிலும், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்வு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

200 ஆண்டுகளில்
தலைநகர் சென்னையில் கனமழை கொட்டித்தீர்ப்பதால் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் இந்த மாதம் மட்டும் 1000 மி.மீ மழை பதிவானதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த 200 ஆண்டுகளில் தலைநகர் சென்னையில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இது 4ஆவது முறையாகும். இதற்கு முன் 1918 நவம்பர் (1088 மிமீ), 2005 அக்டோபர் (1078 மிமீ), 2015 நவம்பர் (1049 மிமீ), ஆகிய ஆண்டுகளில் மட்டுமே 1000 மி.மீ மழை பதிவானது.

புதிய சாதசாதனை
இந்த மாதம் முடிய இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில், மற்றொரு புதிய சாதனை படைக்கவும் வாய்ப்புள்ளது. கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டாலும் கூட பல பகுதிகளில் நிலைமை மிக விரைவாக வெள்ள நீர் வெளியேற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தி.நகரின் உஸ்மான் சாலை உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகச் சென்னைவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வெள்ள பாதிப்பு
வேளச்சேரியில் உள்ள நாராயண புரம் ஏரி நிரம்பி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால் அங்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல செம்மஞ்சேரி ஏரி நிரம்பியதால் ஓ.எம்.ஆர். சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல நகரைச் சுற்றியுள்ள பல முக்கிய ஏரிகளும் நிரம்பி சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதிகளில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை
இப்படித் தொடர்ந்து வெளுத்துக் கட்டும் கனமழையால் சென்னைவாசிகளின் இயல்பு வாழ்க்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரால் அலுவலகங்கள் செல்வோர் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். இப்படி மழை தொடர்ந்து பெய்து வருவதால் வணிகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மெரினா உள்ளிட்ட பல பகுதிகளில் கடைகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளதால் வணிகர்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சில மணி நேரம் மழை பெய்தாலே நகரில் வெள்ள நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் இப்படியொரு நிலை ஏற்படாமல் இருக்கச் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications