40 நாள்.. இந்தியாவின் 75 நகரை வலம் வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி.. மாமல்லபுரத்தில் உற்சாக வரவேற்பு
சென்னை: இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நாளை துவங்க உள்ளது. இதையொட்டி 40 நாளில் இந்தியாவின் 75 நகரங்களில் வலம் வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி இன்று மாமல்லபுரம் வந்தது. இந்த ஜோதிக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகத்தின் மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் துவங்க உள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை துவக்க விழா நடைபெற உள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெற உள்ளது பெருமையான விஷயமாகும். இதனால் இந்த போட்டியை விமரிசையா நடத்த தமிழக அரசு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜோதி ஓட்டம்
முன்னதாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை குறித்து நாடு முழுவதும் பிரபலப்படுத்தும் வகையில் ஜோதி ஓட்டம் துவங்கியது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 19ல் டெல்லியில் துவங்கி வைத்தார். இதையடுத்து அந்த ஜோதி ஓட்டம் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று நேற்று தமிழகம் வந்தது. நாடு முழுவதும் இந்த ஜோதியை ஏந்தி வீரர்கள் வலம் வந்தபோது உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

40 நாளில் 75 நகரங்களில் வலம்
குறிப்பாக தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜோதியை பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சிகளுடன் விழா போல் மக்கள் வரவேற்றனர். இந்நிலையில் 40 நாளில் இந்தியாவின் 75 நகரங்களில் வலம் வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி இன்று போட்டி நடைபெறும் மாமல்லபுரத்துக்கு வந்தது. ஜோதியை தமிழக அமைச்சர்கள் மெய்யநாதன், தாமு அன்பரசன் ஆகியோர் பெற்று கொண்டனர்.
Recommended Video

உற்சாக வரவேற்பு
மாமல்லபுரம் வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த ஜோதியை வீரர்கள் கையில் ஏந்தி மாமல்லபுரம் கடற்கரையில் பெருமையாக வலம் வந்தனர். இந்த ஜோதி இன்று மாலை சென்னையில் முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அதன்பிறகு நாளை துவக்கவிழாவில் ஜோதி இடம்பெற உள்ளது.

பிரதமர் மோடி பங்கேற்பு
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 10 வரை நடக்க உள்ளது. நாளை மாலை செஸ் ஒலிம்பியாட்டின் துவக்கவிழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடி மறுநாள் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார். பிரதமரின் தமிழக வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, 22 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக டிரோன் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications