ஒவ்வொரு அடியும் கவனம்..சிதம்பரம் கோவிலில் தவறு நடந்தால் அதிகாரத்தை பயன்படுத்துவோம் - சேகர் பாபு
சென்னை: நாங்கள் எடுத்துவைக்கின்ற ஒவ்வொரு அடியையும் மிக கவனமாக எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறோம் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவிலை கையகப்படுத்துவது என்பது எங்கள் எண்ணம் இல்லை. தவறுகளை சரி செய்ய வேண்டும். அந்த தவறுகளை சரிசெய்யாதபட்சத்தில், அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ, அதை நிச்சயமாக பயன்படுத்துவோம் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நீர்நிலைகளுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு கொசுவலைகளை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.
இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற திருக்கோயில்களில் என்னென்ன வழிமுறைகள், விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதோ அதுவேதான் சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலிலும் பின்பற்றுகிறது" என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
சூப்பர்.. ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை.. பிரதமர் நரேந்திர மோடியிடம் பொறுப்புகள் ஒப்படைப்பு..
இந்து சமய அறநிலையத்துறை
சென்னை தண்டையார்பேட்டையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நான் ஏற்கெனவே கூறியது போல், கோயிலை அரசு எடுத்து நடத்தும் வகையில், நாங்கள் எங்களது செயலை முடுக்கிவிடவில்லை. ஆனால், இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் உட்பட்டு வரக்கூடிய கோயில் என்பதால், அங்கு நடைபெறக்கூடிய நிர்வாகம் முறையாக நடைபெற வேண்டும் என்பதுதான் இந்துசமய அறநிலையத்துறையின் மேலான எண்ணம்.
ஒவ்வொரு அடியும் கவனம்
தமிழக முதல்வர் சட்டத்தின் ஆட்சியை தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார். சட்டத்தை மீறிய செயல்கள் எங்கு நடந்தாலும், அதை கட்டுப்படுத்த, அதை முழுவதுமாக அப்புறப்படுத்த வேண்டும் என எங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். நாங்கள் எடுத்துவைக்கின்ற ஒவ்வொரு அடியையும் மிக கவனமாக எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறோம்.
காலக்கெடு
சிதம்பரம் நடராஜர் கோயில் தரப்பில் பதிலளிக்க வேண்டிய காலக்கெடு 15ஆம் தேதி முடிவடைந்துவிட்டதால், அடுத்த என்ன செய்ய வேண்டியது என்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்போம். இந்துசமய அறநிலையத் துறை சட்டத்துக்குட்பட்டு விதிமீறல்கள் இருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருக்கோவில் காணிக்கை
திருக்கோயிலை கையகப்படுத்துவது என்பது எங்கள் எண்ணம் இல்லை. தவறுகளை சரி செய்ய வேண்டும். அந்த தவறுகளை சரிசெய்யாதபட்சத்தில், அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ, அதை நிச்சயமாக பயன்படுத்துவோம். திருக்கோயிலுக்கு பக்தர்களால் காணிக்கை செலுத்தப்படுகிறது. பக்தர்களால் பெறக்கூடிய காணிக்கையை முறையாக அந்த திருக்கோயிலின் அடிப்படை வசதிகளுக்கு செலவிடப்பட வேண்டும் என்பது தமிழக முதல்வரின் உத்தரவு.
அரசு விதிமுறைகள்
அதோடு பழமையான இந்த திருக்கோயிலில் இருக்கின்ற, பாரம்பரிய மன்னர்களால் வழங்கப்பட்ட நகைகள், சொத்துகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு எங்களுடைய செயல்கள் அமைந்திருக்கின்றன. மற்ற திருக்கோயில்களில் என்னென்ன வழிமுறைகள், விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதோ அதுவேதான் சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலிலும் பின்பற்றுகிறோம் என்றும் கூறினார்.
கோவில்களில் விளம்பரங்கள்
அப்போது அவரிடம் திருக்கோயில்களில் தமிழ்வழி அர்ச்சனை எப்போது பரவலாக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படுகின்ற அதிக வருவாய் தருகின்ற 48 முதுநிலை கோயில்களில், உரிய விளம்பர பதாகைகள் வைத்து, எந்த அர்ச்சகர் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகரின் பெயரும், அவரது கைப்பேசி எண்ணும் அதில் இடம்பெறச்செய்யப்பட்டுள்ளது.
அன்னைத் தமிழில் வழிபாடு
அன்னைத் தமிழில் வழிபாடு என்ற திட்டம் மிக பிரகாசமாக சென்று கொண்டிருக்கிறது. அந்த அர்ச்சகர்களை இத்திட்டத்தை ஊக்குவிப்பதற்காகத்தான் பக்தர்களின் கட்டண ரசீதுகளில் இருந்து 60 சதவிகிதத்தை அர்ச்சனை மேற்கொள்ளும் அர்ச்சகர்களுக்கே வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
முழு அளவில் செயல்படுத்துவோம்
மொத்தம் 580 திருக்கோயில்கள் அதிக வருவாய் ஈட்டும் கோயில்களாக கண்டறியப்பட்டிருக்கின்றன. இதில் 48 திருக்கோயில்களுக்கு இந்த அன்னைத் தமிழ் வழிபாடு திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. மீதமிருக்கும் திருக்கோயில்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு உண்டான, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து திட்டத்தை முழு அளவில் செயல்படுத்துவோம் என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.