ஏமாற்றம் இருக்காது.. மாற்றம் இருக்கும்! நச்சென்று சொன்ன முதல்வர் ஸ்டாலின்.. உதயநிதி ஆதரவாளர்கள் குஷி
சென்னை: தற்போது தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகப் போவதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் உலாவுகிறது. இந்த நிலையில் உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்படுவாரா என்பது குறித்து இரண்டே வரியில் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
திமுக இளைஞர் அணி செயலாளராக நியமனம் செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின், 2021 சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அவர் அமைச்சராக பதவியேற்பார் என கூறப்பட்ட நிலையில் அவரது ஆதரவாளர்கள் அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டனர். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலினுக்கு எப்போது அமைச்சர் பதவி வழங்கப்படும் என்பதே பேசுபொருளாக இருந்தது.
ஒரு வழியாக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும் உதயநிதி சில மாதங்களுக்கு பிறகு நியமனம் செய்யப்பட்டார். இதற்கிடையே இந்த மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா சென்ற நிலையில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக பதவி உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியானது.
தொடர்ந்து பல மாதங்களாகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக எப்போது பதவி ஏற்பார் என்ற விவாதங்கள் எழுந்தது. இது தொடர்பாக திமுக அமைச்சர்களும் பல்வேறு கருத்துக்களை கூறி வந்தனர். இதற்கு நேரடியாகவே பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், எதுவாக இருந்தாலும் முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார் எனக் கூறியிருந்தார். இதற்கிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்று வந்துவிட்ட நிலையில், இன்னும் அறிவிப்பு வெளியாகாமல் இருக்கிறது.
இந்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த விழாவில் திமுக சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, பாவேந்தர் விருது உள்ளிட்ட விருதுகளும் வழங்கப்பட்டது.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்,"உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டாமா? உங்களை பேராசிரியர் அன்பழகன் ஏற்றுக் கொண்டதைப் போல நாங்களும் உதயநிதி ஸ்டாலினை ஏற்றுக் கொள்வோம். காலம் தாழ்த்தாதீர்கள்" என பேசினார். இதனையடுத்து உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டுமென்ற கோரிக்கை மீண்டும் திமுகவில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்படுவாரா என்பது குறித்து இரண்டே வரியில் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிய பணிகளை தொடங்கி வைத்தும், ஏற்கனவே நடைபெற்று வரும் பணிகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின்,"கொளத்தூர் என்னுடைய சொந்த தொகுதி. தங்கள் வீட்டு பிள்ளை போல தொகுதி மக்கள் என்னை பார்க்கிறார்கள். நான் எப்போது நினைத்தாலும் இங்கு நான் வருவேன். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக அரசு உள்ளது. மாவட்ட நிர்வாகிகளுடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இது நாட்களில் ஆலோசனை நடத்த உள்ளேன். கடந்த ஆட்சியில் முதலீடுகள் எப்படி ஈர்க்கப்பட்டது என அனைவருக்கும் தெரியும். அமைச்சர் டிஆர்பி ராஜா, முதலீடுகள் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையே வெள்ளை அறிக்கை தான் என்றார்.
அப்போது நீண்ட நாட்களாக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, துணை முதலமைச்சராக நியமிக்க இருப்பதாகவும், அமைச்சரவையில் மாற்றம் இருப்பதாக செய்திகள் வெளியாவது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்க முதலமைச்சர் ஸ்டாலின்," ஏமாற்றம் இருக்காது.. மாற்றம் இருக்கும்" என நான்கே வார்த்தையில் பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications