வேலூரில் மினி டைடல் பூங்கா.. அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்.. 3,300 பேருக்கு வேலை வாய்ப்பு!
வேலூரில் அமையவுள்ள மினி டைடல் பூங்காவிற்கு மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார்.
சென்னை: வேலூர் மாவட்டம் மேல்மொனவூர் பகுதியில் அமைய உள்ள மினி டைடல் பார்க் கட்டுமானப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். அதேபோல், கிருஷ்ணகிரியில் உள்ள சிப்காட் தொழிற் பூங்காவில் அமைய உள்ள ஓலா நிறுவனத்திற்கும் - தமிழ்நாடு அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களை கடந்து இரண்டாவது மற்றும் மூன்றாம் நிலைகளில் உள்ள நகரங்களிலும் தொழில் வளர்ச்சியையும், அதற்கான கட்டமைப்பையும் மேம்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
இதற்காக பல்வேறு முக்கிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் வேலூரில் மினி டைடல் பார்க் கட்டட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

மினி டைடல் பார்க்
2021-2022ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக விழுப்புரம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

அடிக்கல் நாட்டிய மு.க.ஸ்டாலின்
அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம், மேல்மொனவூர்- அப்துல்லாபுரத்தில் அமைந்துள்ள அரசு தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில், 4.98 ஏக்கர் நிலப்பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு ரூ.30 கோடி மதிப்பீட்டில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் 60,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ள மினி டைடல் பூங்காவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் 3,300 பேருக்கு வேலை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஓலா - தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்
அதேபோல் ஓலா எலக்ட்ரிக் மொபிலிடி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது துணை நிறுவனங்களான ஓலா செல் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட் மூலமாக முதற்கட்டமாக, மின்கல உற்பத்தி ஆலை மற்றும் மின் வாகன உற்பத்தி ஆலை நிறுவ முன்வந்துள்ளது. இத்திட்டத்தில், உறுதி செய்யப்பட்ட முதலீடு ரூ.7,614 கோடியாகும்.

கிருஷ்ணகிரியில் ஓலா நிறுவனம்
இதில் ஓலா செல் டெக்னாலஜீஸ் நிறுவனம் ரூ.5,114 கோடியும், ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜீஸ் நிறுவனம் ரூ.2,500 கோடியும் முதலீடு செய்யவுள்ளது. இதன்மூலம் 3 ஆயிரத்து 111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் பர்கூர் தொழிற் பூங்காவில் நிறுவப்பட உள்ளது.

1.40 லட்சம் மின்சார வாகனங்கள்
இதன்மூலம் 1.40 லட்சம் நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் 20 கிகாவாட் மின்கலன்கள் உற்பத்தித் திறன் கொண்ட ஆலைகளை அமைப்பதற்கு இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கும் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குமிடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.












Click it and Unblock the Notifications