”குடிநீரில் மனிதக்கழிவை கலந்ததற்கு கண்டனம்” குற்றவாளிகளை கைது செய்வோமென முதல்வர் ஸ்டாலின் உறுதி!
சென்னை: வேங்கைவயல் கிராமத்தின் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும், இதுவரை 70 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சியில் இறையூர் கிராமத்தில் உள்ள ஒரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இந்த பகுதியில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் துர்நாற்றத்துடன் குடிநீர் வந்ததை அறிந்த பொதுமக்கள், தொட்டியின் மேலே சென்று ஆய்வு மேற்கொண்ட போது அதில் மர்ம நபர்கள் மலம் கலந்திருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக வெள்ளனுர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்தே ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தனர்.
பொங்கல் பரிசு இருக்கட்டும்.. முத்து முத்தாக.. 4 அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்.. குஷி செய்தி
அப்போது அப்பகுதியினர் அளித்த புகார் மூலமாக அய்யனார் கோவிலுக்கு பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படுவவில்லை என்பதும், தேநீர் கடையில் இரட்டை குவளை முறை பின்பற்றப்பட்டதும் தெரியவந்தது. பின்னர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக பட்டியலின அனைத்து மக்களை கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபட செய்தார்.
தேநீர் கடை உரிமையாளர்கள் கைது
அப்போது சாமி வந்ததை போல் பட்டியலின மக்களை இழிவாக பேசிய சிங்கம்மாள் மற்றும் அஞ்சப்பன் ஆகியோர் மீது எஸ்சி/எஸ்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு செய்யப்பட்டது. மேலும் அங்குள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறையை கடைபிடித்த கடை உரிமையாளர் மூக்கையா மற்றும் மனைவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல் சிங்கம்மாள், மூக்கையா இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
11 பேர் குழு விசாரணை
இருப்பினும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்யவில்லை. இதனிடையே குடிநீரில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க திருச்சி சரக டிஐஜி தரப்பில் ஏடிஎஸ்பி ரமேஷ் கிருஷ்ணா தலைமையில் 11 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
இந்த நிலையில் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட பிரச்சினை தொடர்பாக சட்டசபையில் சி.விஜயபாஸ்கர் மற்றும் ஜிகே மணி உள்ளிட்டோர் விதி 55ன் கீழ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசுகையில், சாதி தீண்டாமை கொடுமை இன்னும் அங்குன்றும், இங்கொன்றுமாக இருப்பதை வேங்கைவயல் சம்பவம் வெளிப்படுத்தி இருக்கிறது. இது வருத்தத்திற்குரியது, கண்டனத்திற்குரியது.
மு.க.ஸ்டாலின் விளக்கம்
வேங்கைவயல் சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்கவும், பாதுகாப்பான குடிநீர் தடையின்றி கிடைத்திடவும் உத்தவிட்டேன். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர், உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வேங்கைவயல் கிராமத்தில் கிருமிநீக்கம் செய்யப்பட்ட பின், குடிநீர் ஆய்வு செய்யப்பட்டது. அதன்பின்னர், மனிதக் கழிவுகள் கலந்துள்ளது தெரிய வந்தது.
புதிய குடிநீர் இணைப்பு குழாய்
அதேபோல் வேங்கைவயல் கிராமத்தில் மருத்துக்குழு முகாமிட்டு பணிபுரிந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ரூ.2 லட்சம் செலவில் புதிய இணைப்பு குழாய்கள், குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வேங்கைவயலில் தினசரி டேங்கர் லாரி மூலமாக காலை, மாலை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
70 பேரிடம் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பான புகாரின் அடிப்படையில், இதுவரை 70 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கண்டறிய அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மதம், சாதி மதங்களை தூக்கிபிடித்து பிரிவினை ஏற்படுத்தும் சமூக விரோதிகள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.