நேற்றிலிருந்து நான் போனை வைக்கவே முடியவில்லை! பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன! ஸ்டாலின் பேச்சு!
சென்னை: நேற்றிலிருந்து தாம் போனை வைக்கவே முடியவில்லை என்றும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்ட திமுக நிர்வாகி கோவி.அய்யாராசு இல்ல மண விழாவை தலைமை தாங்கி நடத்தி வைத்த அவர் இதனைக் கூறினார்.
அதன் விவரம் வருமாறு:

புயல் மழை
மூன்று நாட்களாக பெய்த மழை - புயல் அதெல்லாம் எப்படி சமாளித்தோம், அதில் என்ன பெயர் கிடைத்திருக்கிறது. இரண்டு நாட்களாக பார்க்கிறவர்கள் எல்லாம் இதைத்தான் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். நம் ஆட்சிக்கு வந்தபோது என்ன நிலை, ஒரு பெரிய கொடிய தொற்று நோய் 'கொரோனா'. அதிலிருந்து மீண்டோம். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய மா.சுப்பிரமணியன் மட்டும் மருத்துவத் துறை அமைச்சர் அல்ல, முதலமைச்சரிலிருந்து அனைவரும் மருத்துவத் துறை அமைச்சராக மாறினோம். அதனால்தான் அதைக் கட்டுப்படுத்த முடிந்தது.

குவியும் பாராட்டு
அது முடிவதற்கு முன்னாலே, வெள்ளம் வந்தது. பெரிய மழை வந்தது. அதையும் சமாளித்து அதிலும் வெற்றி கண்டோம். இப்போது பெரிய புயல் வந்தது. புயலையே சந்திக்கிற ஆற்றல் இன்றைக்கு இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது. நேற்றிலிருந்து போனை வைக்கவே முடியவில்லை. எல்லோரும் போன் செய்து, ரொம்ப சிறப்பாக செய்து விட்டீர்கள்... ரொம்ப சிறப்பாக செய்து விட்டீர்கள் என்று பாராட்டினார்கள். சமூக வலைத்தளங்களில் பார்த்தீர்கள் என்றால் எல்லாம் பாராட்டுகள்தான் வந்து கொண்டிருக்கிறது.

நம்பர் 1
நான்கூட பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னேன். பல இடங்களில் பேசுகிறபோது சொன்னேன். இங்கேகூட மகேஸ் பொய்யாமொழி பேசுகிறபோது சொன்னார். 'நம்பர் ஒன்' முதலமைச்சர் என்று பாராட்டினார். 'நம்பர் ஒன்' முதலமைச்சர் என்பதை எனக்கு அதிகமான பெருமையாகவோ பாராட்டாகவோ நினைக்கவில்லை. என்றைக்கு 'நம்பர் ஒன் தமிழ்நாடு' என்று வருகிறதோ அன்றைக்குத்தான் எனக்குப் பெருமை. அதையும் நிறைவேற்றுவான் இந்த ஸ்டாலின் என்பதை இந்த நேரத்தில் உறுதியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதாரண ஸ்டாலின் அல்ல
ஏனென்றால் நான் சாதாரண ஸ்டாலின் அல்ல, 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்'. அதனால் அதையும் நிச்சயம் நிறைவேற்றுவான் என்ற அந்த உறுதியை எடுத்துச் சொல்லி, அவ்வாறு நிறைவேற்றுகிற அந்த ஆற்றலுக்கு பக்கபலமாக இருப்பவர்களில் ஒருவர்தான் நம்முடைய அய்யாராசு அவர்கள். எனவே அப்படிப்பட்ட ஒரு லட்சியத் தொண்டனை பெற்றிருப்பதில் நாம் பெருமைப்படுகிறோம்.












Click it and Unblock the Notifications