திடீரென அனைத்து அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பறந்த ஃபோன்கால்.. முதல்வர் போட்ட முக்கிய உத்தரவு
சென்னை: வெள்ள நிவாரண நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் மாவட்ட சிறப்புக் கண்காணிப்பு அலுவலர்களை முதல்வர் ஸ்டாலின் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அறிவுறுத்தினார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று மாலை கரையைக் கடக்கிறது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீஹரி கோட்டாவுக்கும், காரைக்காலுக்கும் இடையே இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆய்வுக் கூட்டம்
இதனால் சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. வெள்ள நீரை அகற்றும் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும் கூட, தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நிவாரண பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சென்னை வெள்ள பாதிப்புகள் குறித்த கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், இன்று ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தினார்.

முதல்வர் உத்தரவு
இதற்கிடையே மாவட்ட அமைச்சர்கள் மற்றும் மாவட்ட சிறப்புக் கண்காணிப்பு அலுவலர்களைத் தொலைப்பேசி மூலம் முதல்வர் ஸ்டாலின் வெள்ள நிவாரண நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தரமான உணவு, மருத்துவ வசதி மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சிறப்பு அலுவலர்களைத் தொடர்பு கொண்ட முதல்வர்
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு நிவாரண நடவடிக்கைகளைக் கண்காணித்து, பணிகளைத் துரிதப்படுத்திட அந்தந்த மாவட்டத்திற்குட்பட்ட அமைச்சர்களையும், மாவட்டங்களுக்குச் சிறப்புக் கண்காணிப்பு அலுவலர்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களையும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11-11-2021) தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, மாவட்டங்களில் மழை வெள்ள நிலவரங்களைக் குறித்துக் கேட்டறிந்தார்

நிவாரண உதவிகள்
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் எடுத்திட அறிவுறுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், ஆங்காங்கே நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தரமான உணவு, மருத்துவ வசதி மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்திடவும் உத்தரவிட்டார்.

பயிர் சேதங்கள்
மேலும், துறை அலுவலர்கள் பயிர் சேதங்களைத் தவிர்க்கும் வகையில், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். இதற்கு முன்னதாக இன்று காலை தலைமைச் செயலகத்தில் மாநிலத்தில் மழை வெள்ள நிலை குறித்து மேற்கொள்ளப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்திட முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வருவாய் நிர்வாக ஆணையர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

உதவி எண்கள்
சென்னை மாநகராட்சியின் உதவிகளைப் பெற 1913 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் 94454 77205, 94450 25818, 94450 25820, 94450 25821 என்ற எண்களில் வாட்ஸ்அப் செயலியிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மின் சேவை குறித்த புகார்களை மின் நுகர்வோர் சேவை மையமான 98987 94987 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு அளிக்கலாம்.












Click it and Unblock the Notifications