தமிழர்களை மீட்கும் நடவடிக்கை! நீங்கள் தலையிட வேண்டும்! பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!
சென்னை: மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கைகளில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்திற்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கவேண்டும் என பிரதமர் மோடியை ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.
மணிப்பூரில் இருந்து மியான்மர் சென்ற 2 தமிழர்கள் சுட்டுக் கொலை- நீதி கோரி போராட்டம்- வைகோ கண்டனம்
தமிழர்கள் சிக்கித் தவிப்பு
மியான்மர் நாட்டில் சுமார் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆட்பட்டிருப்பதாக மாநில அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது என்பதை இந்தியப் பிரதமர் அவர்களின் உடனடி கவனத்திற்கு கொண்டுவர விரும்புவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். மேலும் அவர்கள் ஆரம்பத்தில் தனியார் ஆட்சேர்ப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்காக தாய்லாந்து நாட்டிற்குச் சென்றதாகத் தெரியவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டாலின் கவலை
ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு அவர்கள் தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்பது தற்போது தெரியவருவதாகவும் தனது கடிதத்தில் ஸ்டாலின் கூறியிருக்கிறார். மேலும், அவர்கள் அத்தகைய சட்டவிரோத வேலைகளை செய்ய மறுத்ததால் வேலையளிப்போரால் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள் என்று தகவல்கள் வருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்.
17 தமிழர்களுடன் தொடர்பு
அவர்களில் 17 தமிழர்களுடன் மாநில அரசு தொடர்பில் உள்ளதாகவும், அவர்களை விரைவாக மீட்பதற்கு அரசின் உதவியை நாடுகின்றனர் என்றும், மியான்மரில் சட்டவிரோதமாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நமது குடிமக்களின் அவலநிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மோடியை ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
மோடிக்கு கடிதம்
மேலும், உடனடியாக அவர்களை மீட்பதற்கும், பாதுகாப்பாக தாயகத்திற்கு திரும்ப அழைத்துவரவும், மியான்மரில் உள்ள தூதரகத்திற்கு இப்பிரச்சினை குறித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வெளியுறவு அமைச்சகத்திற்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கவேண்டும் என்றும், இது தொடர்பாக பிரதமர் அவர்களின் அவசர தலையீட்டை கோருவதாகவும் தனது கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.