கொரோனா தடுப்பு பணிகள்..மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை..விரைவில் பொது போக்குவரத்திற்கு அனுமதி?
சென்னை: கொரோனா தடுப்பு பணிகள் குறித்து 22 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்த முதலில் இரண்டு வாரங்கள் தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து தளர்வுகளுடன் வரும் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தளர்வுகளுடன் ஊரடங்கு
அதில் கொரோனா பரவல் குறைந்துள்ள 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேற்கு மாவட்டங்களில் கொரோனா இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. இதனால் 11 மாவட்டங்களுக்குக் குறைவான தளர்வுகளே அறிவிக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை
இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து 22 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். இன்று காலை 11 மணிக்குக் காணொலி மூலம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள்

கூடுதல் தளர்வுகள்?
இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலர் இறையன்பு, முதன்மைச் செயலர் உதயச்சந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர். டெல்டா மற்றும் மேற்கு மாவட்டங்களில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ள நிலையில், அது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைவான தளர்வுகள் அறிவிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் கருத்துக் கேட்கப்படும் எனத் தெரிகிறது.

பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி
மேலும், வரும் 21ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மருத்துவக் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கலாமா, அதற்கு உகந்த சூழ்நிலை உள்ளதா, அனுமதி அளிக்கப்பட்டால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications