"திருப்தி"..எப்படிப்பட்ட மழையையும் சமாளிக்கலாம்..முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி
சென்னை : எப்படிப்பட்ட மழை பெய்தாலும் அதை சமாளிக்க கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 15 நாட்கள் முதல் 1 மாதத்துக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும் என்று வட சென்னையில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி, போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, பணிகளும் விரைவாக நடைபெற்றது.
வரும் பருவமழை காலங்களில் மழை வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் அதிக அளவில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டு, அப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று, தற்போது முடிவுறும் தருவாயில் உள்ளன.

முதல்வர் ஆய்வு
சென்னை, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேக்கத்தினை அகற்ற நிரந்தர தீர்வாக ஆலோசனை குழுவின் பரிந்துரைப்படி ரூ. 24 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும், சென்னை சென்ட்ரல் முதல் மூலக்கொள்ளத்தம் வரை ரூ. 33 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 4600 மீ நீளத்திற்கான மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், எட்டு குறுவடிகால்கள் மற்றும் மூன்று அணுகு கால்வாய்கள் அமைக்கும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.

பக்கிங்காம் கால்வாய்
டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேக்கத்தினை அகற்ற நிரந்தர தீர்வாக சிங்கார சென்னை Phase 1 திட்டத்தின் கீழ் ரூ.2.81 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும், நீர்வளத்துறை சார்பில், பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளும் வகையில் சென்னை, பேசின் பாலத்திற்கு அருகில் வடக்கு பக்கிங்காம் கால்வாயில் ரூ. 40 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும் முதல்வர் ஆய்வு செய்தார்.

மழைநீர் வடிகால் பணி
புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் மழைநீர் தேக்கத்தினை அகற்ற நிரந்தர தீர்வாக ஆலோசனை குழுவின் பரிந்துரைப்படி ரூ. 6.28 கோடி மதிப்பீட்டில் 790 மீ நீளத்திற்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

திருப்தி
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது, 15 நாட்கள் முதல் 1 மாதத்துக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும் என்று கூறினார். எப்படிப்பட்ட மழை பெய்தாலும் அதை சமாளிக்க கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் 70% முதல் 80% வரை மழை நீர் வடிகால் பணிகள் முடிந்து இருக்கின்றன என்றும் சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் திருப்தி தருகின்றன என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications