கலெக்டர்களுக்கு தலைமை செயலர் இறையன்பு எழுதிய கடிதம்.. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ‘கறார்’ உத்தரவு!
சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் தலைமை செயலர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பதால் தீவிரமாக தூய்மை பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் பள்ளிகளை தூய்மைப்படுத்த தலைமை ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் நிதி வசூலிக்க கூடாது என்றும்
உத்தரவிட்டுள்ளார்.

தூய்மையாக இருக்க வேண்டும்
தமிழக அரசின் தலைமை செயலர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "வர்ணம் பூசுதல் , மைதானங்களை தூய்மைப்படுத்துதல், கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மூடப்பட்டு இருக்கும் நிலையில் சேர்ந்து இருக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆய்வரங்குகளில் தேவையான பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டு ஆய்வகங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கழிவறைகள் நல்ல முறையில் தூய்மையாக இருக்க வேண்டும்.

நிதி வசூலிக்க கூடாது
வகுப்பறைகள் மற்றும் கரும்பலகைகள் தூய்மையாக இருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகங்களை சேர்ந்தவர்களை ஈடுப்படுத்த வேண்டும் அவர்களிடம் எவ்விதமான நிதி வசூலையும் பெற்று இப்பணிகளை மேற்கொள்ளகூடாது என்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெறக்கூடாது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விளையாடத் தயாராக
கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைகள் எந்த வித உடற்பயிற்சியும் இல்லாமல் இருந்து வருகின்றனர். எனவே விளையாட்டு மைதானம் குழந்தைகள் விளையாடும் அளவுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். குடிநீரில் சரியான அளவு குளோரின் கலந்து இருக்க வேண்டும். பள்ளி கட்டிடம் மற்றும் மதிய உணவு கூடம் ஆகியவை தூய்மைப்படுத்தப்பட்டு வெள்ளையடித்து இருக்க வேண்டும்.

விருது வழங்கப்படும்
பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து இந்த பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். பல தலைமை ஆசிரியர்கள் இந்த பணியை மிகவும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள் என்பது அறிந்ததே. பல தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளை தங்களின் வீடுகளை போன்று தூய்மையாக வைத்துக் கொள்கிறீர்கள்.
இது போன்று சிறப்பாக செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுதந்திர தின விழாவில் விருதுகள் வழங்கப்படும்" என இறையன்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications