"லவ் மேரேஜ் செய்யலாமா! யாரை காதலிக்கலாம் தெரியுமா" கல்லூரி நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை பளீச்
சென்னை: கல்லூரி பட்டமளிப்பு விழா ஒன்றில் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பல்வேறு விவகாரங்களில் முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தெலுங்கானா ஆளுநர் டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், "அனைவரது வாழ்க்கையிலும் மாணவர் பருவம் என்பது மிக மிக முக்கியமானது. இந்த மாணவர் பருவத்தில் அனைவரும் நன்றாகப் படிக்க வேண்டும். நமது திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
கல்லூரி வாழ்க்கையை மகிழ்ச்சி உடன் கொண்டாடலாம். அதில் தவறு இல்லை. ஆனால், அதேநேரம் அனைத்தையும் ஒரு கட்டுப்பாடு உடன் கொண்டாடுங்கள். அது தான் உங்கள் வளர்ச்சிக்கு பலத்தை அளிக்கும்.
படிப்பு மற்றும் திறமைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் அதேநேரம் குடும்ப வாழ்க்கையிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஆண், பெண் என யாராக இருந்தாலும் சரி, குடும்ப வாழ்க்கையைச் சரியான நேரத்தில் சரியான முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மருத்துவர் என்ற முறையில் சொல்கிறேன். 35 வயதைக் கடந்த பின்னர், பெண்கள் கர்ப்பம் அடைவதில் பல சிக்கல்கள் ஏற்படும். உரியக் காலத்தில் பெற்றோர் பார்க்கும் வரன்களை ஆராய்ந்து சரியான நபரைத் தேர்வு செய்து குடும்ப வாழ்க்கைக்குத் தயாராக வேண்டும்.
நான் இப்படிச் சொல்வதால், எதோ தமிழிசை காதல் திருமணத்திற்கு எதிரானவர் என்று நினைத்துவிடாதீர்கள். காதலிப்பது தவறு இல்லை. நீங்கள் காதலிக்கும் பெண்ணோ, ஆணோ உங்களை ஏற்றுக் கொள்ளும் நபராக இருக்க வேண்டும். ஏமாற்றும் நபராக இருக்கக் கூடாது. சரியான நபரைக் காதலித்தால் மட்டுமே காதல் வாழ்க்கை இனிக்கும்.
இப்போது அங்கும் கூட நிறையப் பெற்றோர்கள் இருக்கிறீர்கள். குழந்தை வளர்ப்பில் பாரபட்சமும் காட்டக் கூடாது. மகள்களுக்கு இத்தனை மணிக்குள் வீட்டுக்கு வர வேண்டும். ஆண்களுடன் பழகக்கூடாது. வெளியே சுற்றக்கூடாது. உடை கட்டுப்பாடுகள் எனப் பல கட்டுப்பாடுகளை விதிக்கிறோம். அதைத் தொடர்ந்து கண்காணித்தும் வருகிறோம்.
ஆனால் மகன்களை இப்படியா வளர்க்கிறோம். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்கு வரலாம். எங்கு வேண்டுமானாலும் போகலாம். எப்படியும் வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்று விட்டு விடுகிறோம். கண்டிப்பும், கட்டுப்பாடும் இல்லாததால் அவர்கள் தடம் புரள்கிறார்கள்.
இந்த சமூகத்தில் ஆண்களைச் சரிசெய்யும் போது தான் பெண்களால் பாதுகாப்பாக இருக்க முடியும். மகள்களைப் போல் மகன்களையும் உரியக் கட்டுப்பாட்டுடன் வளருங்கள்" என்று பேசினார்.
புதுச்சேரிக்கு முதல்ல குடிக்க வருவாங்க! இப்போ எதுக்கு வர்றாங்க தெரியுமா? ரங்கசாமி முன் கலகல தமிழிசை!