சென்னை ஏர்போர்டில் எதிர்பாராத சிக்கல்.. பிரபல தியேட்டரை மூட உத்தரவு... எதிர்க்கும் நிர்வாகம்..ஏன்?
சென்னை: சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள பிரபல தனியார் திரையரங்கை மூட விமான ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கு 6 அடுக்கு பார்க்கிங்கில் உள்ள தியேட்டரின் நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை நவீன வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும் என்ற திட்டத்தில் திரையரங்கு, வணிக வளாகம், உணவகம் போன்றவைகளை அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து ரூ.2,400 கோடியில் 2 கட்டங்களாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. அண்மையில் 250 கோடியில் 6 அடுக்கு கார் பார்க்கிங் அமைக்கப்பட்டது. அதன் உள்பகுதியில் வணிக வளாகம், ஓட்டல் மற்றும் பயணிகள் பொழுது போக்கிற்காக திரையரங்குகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. பார்க்கிங் ஒரு பக்கம் என்றால், கடந்த பிப்ரவரி மாதம் முதல் பிரபல தனியார் தியேட்டரும் செயல்பட்டு வருகிறது.

சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மட்டுமின்றி, செனனை விமான நிலையத்தில் தியேட்டர் இருப்பதை அறிந்த சென்னை மக்கள் பலரும் ஆர்வமுடன் படம் பார்க்க ஏர்போர்ட் வருகிறார்கள்.
சென்னை விமான நிலையத்தில் உள்ள கார் பார்க்கிங் என்பது சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்காக இருக்கிறது. இந்த பார்க்கிங்கை சில நேரங்களில் முழுமையாக தியேட்டர்களுக்கு வரும் பயணிகளால் ஆக்கிரமிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் விமான பயணிகள் வாகனங்களை நிறுத்த முடியாமல் அவ்வப்போது இடநெருக்கடி ஏற்பட்டு வருகிறதாம்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திரையரங்கிற்கு படம் பார்க்க வந்த ஒரு பெண், கார் பார்க்கிங்கில் உள்ள 4-வது தளத்தில் இருந்து குதித்து உயிரை மாய்த்து கொண்டார். இதனால் விமான நிலையத்தில் இருந்து பெண் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் பரவி, சட்டம், ஒழுங்கு பிரச்சினையும் விமான நிலையத்தில் ஏற்பட்டது.
இதையடுத்து காவல் துறை, பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் கொடுத்தார்கள். இந்த புகார்கள் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கும் அனுப்பப்பட்டது. இதையடுத்து 6 அடுக்கு கார் பார்க்கிங்கில் உள்ள திரையரங்கை மூடச் சொல்லி சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் உத்தரவிட்டு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விமான நிலையத்திற்குள் தியேட்டருக்கு அனுமதி கொடுத்ததில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக கூறும் அதிகாரிகள், பாதுகாக்கப்பட்ட விமான நிலைய வளாகத்துக்குள் திரையரங்கு இருப்பது சரியாக இருக்காது என்று கருதிய இந்திய விமான நிலைய ஆணையம் திரையரங்கை மூட நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. மேலும் திரையரங்கை மூட கடிதமும் அனுப்பி உள்ளது.
ஆனால் இதற்கு தியேட்டர் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. முறைப்படி அனுமதி அளித்த திரையரங்கை எந்த விதத்தில் மூடுவீர்கள்? நாங்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications