உழைப்பே ஒளிமயமான வாழ்வுக்கு வழிவகுக்கும்... தலைவர்கள் மே தின வாழ்த்துச்செய்தி
சென்னை: உழைப்பே ஒளிமயமான வாழ்வுக்கு வழிவகுக்கும் என்றும் உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உழைக்கும் மக்களின் உன்னதத்தை உலகிற்கு பறைசாற்றும் தினமாக மே தினம் விளங்குகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உழைப்பாளர் தினம்
செந்நீரும் கண்ணீரும் சிந்திய தொழிலாளர்கள் சிகாகோ நகரில் மாபெரும் வெற்றிப் பேரணியை நடத்தி, மகத்தான உரிமைகளைப் பெற்ற, மேதினி போற்றும் மே முதல் நாளை நினைவு கூர்ந்திடும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அனைத்துத் தொழிலாளர்களுக்கும் மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வியர்வையை மூலதனமாக வைத்து உழைக்கும் தொழிலாளர்களுக்கு உரிமைகளை அசையாச் சொத்துகளாக வழங்கி- அவர்களின் வாழ்விலும், வளத்திலும், ஏற்றத்திலும், மாற்றத்திலும் உணர்வொன்றி உடன் பயணித்தவர் கலைஞர் என ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
காங்கிரஸ் வாழ்த்து
ஊரடங்கால் வேலை இழந்த தொழிலாளர்கள், நிர்வாக பணியாளர்கள் உள்ளிட்ட உழைத்து வாழும் மக்கள் படும்பாடு சொல்லி மாளாது. எனவே தொழிலாளர்களின் நிலையை உயர்த்த மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்கள் சிந்தும் கண்ணீருக்கு விடை தரும் வகையில் மே 1 ஆம் தேதி அமைய வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அனைவருக்கும் மே தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்லதொரு எதிர்காலம்
ஊரடங்கு போட்டு உழைக்கின்ற மக்கள் அத்தனை பேரையும் வீட்டில் சிறை வைத்துவிட்டு உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்களை சொல்வதற்கு கொஞ்சம் நெருடலாக தான் இருக்கிறது. இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் உழைப்பாளிகள் எல்லோருக்கும் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையை விதைக்க வேண்டியுள்ளது. நல்லதொரு எதிர்காலம் உழைப்பாளிகளுக்கு காத்திருக்கிறது என்று சொல்லி மே தின வாழ்த்துக்களை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
நலம் கொழிக்கட்டும்
உலகமெங்கும் உள்ள உழைக்கும் மக்களின் உரிமை திருநாளான மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்நன்னாளில் தொழிலாளர்களைச் சுரண்டும் அனைத்து சக்திகளையும் ஒழித்து தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளையும், பயன்களையும் அடைய உறுதியேற்போம். கொரோனா வைரஸ் ஒழிக்கப்பட்டு மீண்டும் தொழில்கள் தொடங்கி தொழிலாளர்கள் அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும் கொழிக்கட்டும்.