திருச்சி சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதி- முதல்வர் அறிவிப்பு
சென்னை: திருச்சி சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் இரவு 2 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற ஆடுகளுடன இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றபோது அவர்கள் நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.
இதனால் அவர்கள் ஆடு திருட்டு கும்பல் என்பதை அறிந்த பூமிநாதன் அவர்களை துரத்தி சென்ற போது இருவர் பூமிநாதனை படுகொலை செய்தனர்.

ரூ 1 கோடி நிதியுதவி
இந்த நிலையில் பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதியுதவி வழஙகப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் உட்கோட்டம், நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் 21 ஆம் தேதி அதிகாலை நவல்பட்டு எல்லைக்குள்பட்ட பூலாங்குடி காலனியில் இரவு ரோந்து பணியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

இரு திருடர்கள்
அப்போது அடையாளம் தெரியாத இரண்டு திருடர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் போது துரத்தி பிடித்துள்ளார். இந்த சம்பவத்தின்போது அந்த மர்ம நபர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனை வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து காவல் துறையின் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பூமிநாதனை வெட்டிய மர்மநபர்கள்
பூமிநாதன் சிறப்பு உதவி ஆய்வாளர், ரோந்து பணியிலிருக்கும் போது மர்மநபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்று மிகுந்த துயரமடைந்தேன். இந்த கொடிய சம்பவத்தால் உயிரிழந்த பூமிநாதன் சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு சார்பில் ரூ 1 கோடி
அவரது குடும்பத்தாருக்கு அரசு சார்பாக உடனடியாக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 1 கோடி நிதியுதவியும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கு தொடர்பாக 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications