44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
சென்னை: சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சா்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகிற ஜூலை 28-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை நடக்க விருக்கிறது.
இதில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா். இந்த நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் தொடர்... முதல்முறையாக ஒலிம்பிக் போல தீ சுடர்! களைகட்டும் மாமல்லபுரம்!
ஒலிம்பியாட்
ஒலிம்பியாட் தொடருக்கான தொடக்க விழா ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்துகிறார். மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான லச்சினையை இன்று வெளியிடுகிறார். இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் இறையன்பு, அமைச்சர் மெய்யநாதன், விளையாட்டுத் துறை செயலாளர், செஸ் ஒலிம்பியாட் குழுவினர் பங்கேற்க உள்ளனர். மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க இதுவரை 197 நாடுகள் பதிவு செய்துள்ளன.
ஒலிம்பியாட் தீபம்
இந்த போட்டிகளில் ஒலிம்பியாட் தீபத்தை அறிமுகப்படுத்த சர்வதேச செஸ் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஆர்கடி டிவார்கோவிச் மற்றும் ஒலிம்பியாட் தொடரின் இயக்குநர் பரத் சிங் சௌகான் ஆகியோர் இணைந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஒலிம்பிக் தீபம்
ஒலிம்பிக் போட்டியில் கடைப்பிடிக்கப்படும் பாரம்பரியங்களில் ஒன்றான ஒலிம்பிக் தீபத்தைப்போல் செஸ் ஒலிம்பியாட் தொடரிலும் அறிமுகப்படுத்தவுள்ளனர். இந்த தீபமானது செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல்முறையாக ஏற்றப்பட்டு உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்படவுள்ளது.
செஸ் விளையாட்டு
செஸ் விளையாட்டின் பிறப்பிடம் இந்தியா என நம்பப்படுவதால் இந்தியாவில் நடைபெறும் தொடரிலிருந்து இந்த தீபம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வரும் காலங்களில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டிகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் தீபம் பாரம்பரியமான ஏதன்ஸில் ஏற்றப்படுவது போல் நடப்பாண்டு மற்றும் இனி நடைபெறும் அனைத்து ஒலிம்பியாட் தொடர்களுக்கும் இந்தியாவில்தான் தீபம் ஏற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
44ஆவது செஸ் ஒலிம்பியாட்
இந்தியாவில் தீபம் ஏற்றப்பட்டு உலகம் முழுவதும் எடுத்துச்செல்லப்பட்டு இறுதியில் போட்டி நடைபெறும் இடத்திற்கு கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளனர். 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடர் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.