மக்களின் அன்பைப் பெற்றவர்.. கருணாநிதியின் பாராட்டைப் பெற்றவர் மயில்சாமி.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
நடிகர் மயில்சாமி மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை : நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் மயில்சாமி என்றும் கருணாநிதியின் பாராட்டைப் பெற்றவர் மயில்சாமி என்றும் மயில்சாமிக்கு புகழ்மாலை சூட்டியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
நகைச்சுவை நடிகர் மயில்சாமிக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.
மயில்சாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும் மயில்சாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மயில்சாமி மறைவு
நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்தது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகைச்சுவை நடிகர் மயில்சாமி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 1965-ம் ஆண்டு பிறந்தவர். 1984ல் தாவணிக் கனவுகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மயில்சாமி பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

பன்முகத்திறமை கொண்டவர்
திரைத்துறையில் மட்டுமல்லாது சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார் மயில்சாமி. நகைச்சுவை நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், மிமிக்ரி ஆர்டிஸ்ட் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார் மயில்சாமி. சென்னை வெள்ளத்தின் போது மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளார். களத்தில் இறங்கி பணியாற்றியுள்ளார். அவரது மறைவு, தமிழ் திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
நடிகர் மயில்சாமியின் மறைவு குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், "பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி அவர்கள் மறைந்தார் என்ற துயர்மிகு செய்தியறிந்து வருந்தினேன். பல குரல்களில் நகைச்சுவையாகப் பேசும் ஆற்றல் படைத்த அவர், தன்னுடைய ஒலிநாடாக்கள் வழியாக தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானவர். 'காமெடி டைம்' நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் இல்லங்களில் ஒருவராகவே பார்க்கப்படுகிற அளவுக்கு அன்பைப் பெற்றவர்.

கருணாநிதியிடம் பாராட்டு பெற்றவர்
முத்தமிழறிஞர் கலைஞரின் பாராட்டைப் பெற்றவர். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் தன்னுடைய கருத்துகளை ஆழமாகப் பதிவு செய்யக்கூடியவர். திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர்க்கும் திரையுலகக் கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications