"இந்த வேலை" இங்கே நடக்காது.. ஸ்ட்ரிக்ட் ஸ்டாலின்.. புலம்பும் கூட்டணி கட்சியினர்.. அதிகாரிகள் ஹேப்பி!
சென்னை: திமுகவின் தோழமைக் கட்சிகள் வெற்றி பெற்ற இடங்களிலும் திமுகவினரின் ஆதிக்கமே அதிகம் இருப்பதாக தோழமைக் கட்சிகள் புலம்புகின்றன.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.
அதே கூட்டணி தான் இப்போதும் தொடர்ந்து வருகிறது.
வந்தது சிக்கல்.. ஸ்டாலின் காதுக்கு சென்ற புகார்.. 2 அமைச்சர்கள் செய்த காரியம்.. பரபரப்பில் அறிவாலயம்
கூட்டணி கட்சிகள்
நடைபெற உள்ள, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் இந்த கூட்டணி திமுகவுக்கு பக்க பலமாக இருக்கும் என்று அக்கட்சியினர் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இதற்கிடையேதான், கூட்டணி கட்சியினர் இடையே ஒரு முனுமுனுப்பு எழுந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஆட்சி அதிகாரம்
அது என்ன முனுமுனுப்பு என்கிறீர்களா? விஷயம் இதுதான்.. எந்த ஒரு கட்சி ஆட்சியில் இருந்தாலும் அந்த கட்சி மட்டும் கிடையாது, அதன் கூட்டணி கட்சிகளும் அதிகாரத்தை பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று தான் விரும்பும். தமிழக சூழ்நிலையில் கூட்டணி ஆட்சி அமைந்தால் கூட திமுக அல்லது அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே கூட்டணி கட்சிகளுடன் அமைச்சரவையை பகிர்ந்துகொண்டது கிடையாது.
திமுக கூட்டணி
2006 சட்டசபை தேர்தலை எடுத்துக் கொள்வோமே.. திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும் கூட அறுதிப் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் திமுக வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் ஆதரவை விலக்கினால் அரசு கவிழ்ந்து விடும் என்ற சூழ்நிலை தான் இருந்தது. இதன் காரணமாகத்தான் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா மைனாரிட்டி திமுக அரசு என்று அறிக்கைகள் வெளியிடுவதும் பொதுக்கூட்டங்களில் பேசுவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.
ஆட்சியில் பங்கு இல்லை
அதே காலகட்டத்தில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசில் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டது திமுக. திமுகவை சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்களாக இருந்தனர். ஆனால் தமிழ்நாட்டில் காங்கிரசை சேர்ந்தவர்கள் யாருக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பது தான் திமுகவின் முழக்கமாக இருந்தது. இந்த முழக்கத்தின் அடிப்படையில் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பதில்லை என்றனர்.
கூட்டணி கட்சிகளுக்கு குஷி
அதேநேரம் கூட்டணியில் இருப்பதால், ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு வேறு சில வசதிகள் கிடைப்பது உண்டு. கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள், சில அரசு காண்ட்ராக்ட் அல்லது வேறு ஒப்பந்தங்கள் போன்றவற்றை பெறுவதில் முன்னுரிமை கிடைக்கக்கூடும். மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு அவர்கள் நேரடியாக உத்தரவிட்டு காரியங்களை சாதிக்க முடியும் என்ற நிலைமை இருந்தது. ஆனால் இப்போது திமுக ஆட்சியில் அதுபோல தோழமைக் கட்சிகள் அதிகாரத்தில் தலையிடுவதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஆட்சி முழுக்க முழுக்க வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் நினைப்பதால் கூட்டணி கட்சியினர் எந்த ஒரு விஷயமும் செய்ய முடியாமல் திணறி வருகிறார்கள். இதுதான் இப்போது எழுந்துள்ள புலம்பல்களுக்கு காரணமாம்.
கலெக்டர் ஆபீஸ் உத்தரவு
தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு சில கோரிக்கைகளை எடுத்துச் சென்றால், சம்மந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் , திமுக அமைச்சர் அல்லது மாவட்ட செயலாளர் மூலமாக வாருங்களேன் என சொல்லி தவிர்க்கிறார்களாம். இதற்கு காரணம், தோழமைக் கட்சிகள் எடுத்து வரும் பல கோரிக்கைகள் சட்டத்திற்கு புறம்பாக இருக்கிறது. அதனால் அதில் கலெக்டர்கள் சிக்கிக் கொள்ள விரும்பாததாலேயே அமைச்சர் மூலமாக வாருங்களேன் என நாசுக்காக சொல்லி அவர்களை அனுப்பி வைத்து விடுகின்றனர்.
ஸ்ட்ரிக்ட் ஸ்டாலின்
இது தவிர, நேர்மையான வெளிப்படையான ஆட்சியைத் தர நினைக்கும் முதல்வர் ஸ்டாலின், சட்டத்திற்கு புறம்பாகவோ விதிகளுக்கு புறம்பாகவோ எந்த ஒரு கோரிக்கையை ஆளும் கட்சி உட்பட எந்த கட்சியினர் கொண்டு வந்தாலும் அதனைப் புறக்கணித்து விடுங்கள் என ஏற்கனவே ஸ்டேண்டிங் ஆர்டரை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கொடுத்துள்ளார். அதன்படியே கலெக்டர்கள் நடந்து வருகிறார்கள். இதனால், தோழமைக் கட்சிகளின் புலம்பல்கள் அதிகரித்தபடி இருக்கிறது.
கூட்டணி புலம்பல்கள்
நேர்மையான ஆட்சி தர வேண்டியது தான்.. அதற்காக சில நெளிவு சுளிவுகளை இல்லாவிட்டால் அரசியலில் எப்படி கூட்டணி கட்சிகளுடன் அனுசரணை காட்டமுடியும் என்று சில கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் தனிமையில் தெரிவித்தார்கள் என்கிறது அந்த கட்சி வட்டாரங்கள்.
திமுகவினர்தான் செய்ய முடியும்
நமது ஆட்சி என்ற எண்ணம் தொண்டர்கள் மனதில் இல்லை.. திமுக ஆட்சி என்ற எண்ணம் மட்டும்தான் இருக்கிறது.. நாம் ஏதோ எதிர்க்கட்சியாக இருப்பது போலத்தான் உள்ளது. திமுகவிலும் அனைத்து மட்டத்திலான நிர்வாகிகளும் கலெக்டர் போன்ற உயரதிகாரிகளிடம் கோரிக்கைகளை எடுத்துச் செல்ல முடிவதில்லை. மாவட்ட செயலாளர் அளவிலான நிர்வாகிகள் அல்லது அமைச்சர்கள் அந்தஸ்தில் உள்ளவர்கள் தான் இதைச் செய்ய முடிகிறது என்கிறார்கள் அவர்கள்.
Recommended Video
அதிகாரிகள் மகிழ்ச்சி
அதேநேரம் அதிகாரிகள் தரப்போ இப்போது, மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் அதிகப்படியான தலையீடு இல்லாமல் நிம்மதியாக பணியாற்ற முடிகிறது என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். பொதுவாக அதிமுக ஆட்சியில் அதிலும் குறிப்பாக ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது அவரது நேரடிக் கட்டுப்பாட்டு எல்லா இடத்திலும் இருக்கும். காவல்துறை உள்ளிட்ட எந்த ஒரு ஆட்சி அதிகாரத்திலும் கட்சி நிர்வாகிகள் ஆதிக்கம் செலுத்த முடியாது.
ஸ்டாலின் உறுதி
அதேநேரம், முந்தைய கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி காலங்களில் கட்சிக்காரர்களும் கூட்டணி கட்சிக்காரர்களும் அதிகாரிகளிடம் ஆதிக்கம் செலுத்தியே வம்பை ஏற்படுத்தி விடுவார்கள். இதன் காரணமாகத்தான் சமூக நீதி தொடர்பாக எத்தனையோ திட்டங்களை கொண்டு வந்தாலும் கூட ஆட்சி அதிகாரத்தில் திமுக கட்சிக்காரர்கள் அல்லது கூட்டணி கட்சிக்காரர்கள் தலைவலியாக மாறினர். இது ஆட்சிக்கு கரும்புள்ளியாகவும் மாறியது என்பதே கடந்த கால வரலாறு. இதை ஸ்டாலின் கவனித்து தான், இந்த மாதிரி ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளார் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.