மாணவர்களுக்காக ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.. வியந்து போன அதிமுக.. மிரண்டு பார்க்கும் பாஜக
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்தப்படாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு, கூட்டணி கட்சியினரை மட்டுமல்ல. பாஜகவினரையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலையின் காரணமாக பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக மத்திய அரசு சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை இந்த ஆண்டு ரத்து செய்துள்ளன. பல்வேறு மாநிலங்களுகம் இதே காரணத்திற்காக தங்களது மாநிலங்களில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்துள்ளன.
இப்பொதுத் தேர்வுளை நடத்துவது குறித்து கடந்த மூன்று தினங்களாக பள்ளியில் தொடங்கி, மாவட்டம் மற்றும் மாநில அளவில் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள், பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பொது சுகாதாரம் மற்றும் உளவியல் நிபுணர்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடமும் தமிழக அரசு கருத்துக்கள் கேட்டது.
அதிமுக ஆதரவு
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நேற்று அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடம் 12ம் வகுப்பு தேர்வை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, த.வா.க., கொ.ம.தே.க. மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட ஏழு கட்சிகள் 12ம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின. அதிமுக பெரும்பான்மை கட்சிகள் முடிவே தங்கள் முடிவு என்று கூறியது. அதன்படி தேர்வை நடத்த அதிமுகவும் ஆதரவு தெரிவித்தது.
எதிர்த்த கட்சிகள்
அதேநேரம் பாஜக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புரட்சி பாரதம் என ஐந்து கட்சிகள் 12ம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டாம் என்று வலியுறுத்தின. இந்நிலையில் கட்சிகள் கூறிய கருத்துக்கள், பொதுமக்கள் கூறிய கருத்துக்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கூறிய கருத்துக்களையும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
12ம் வகுப்பு தேர்வு ரத்து
இந்நிலையில் 12ம் வகுப்பு தேர்வை தமிழக அரசு நிச்சயம் நடத்தும் என்றே கருத்துக்கள் பரவிய நிலையில், பாஜகவினரே ஆச்சர்யப்படும் வகையில் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின். தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தார் மேலும் மதிப்பெண் எப்படி வழங்குவது என்பது குறித்து குழு அமைக்கப்படும் என்றும். இந்தகுழு பரிந்துரையின் பேரில் அளிக்கப்படும் மதிப்பெண் அடிப்படையி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலினின் இந்த முடிவை ஆச்சர்யத்துடன் அதிமுக பார்க்கிறது. ஏனெனில் மத்திய பாஜக அரசு எடுக்கும் முடிவுக்கு எதிராக திமுக முடிவெடுக்கும் என்று நினைத்தது,, ஆனால் மத்திய அரசு எடுத்த முடிவையே ஸ்டாலினும் எடுத்துள்ளார்.
பாஜக வரவேற்பு
முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்பை வரவேற்றுள்ள பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திரிபாதி, வெளியிட்ட ட்வீட் பதிவில் "வக்கற்ற அடிமை தமிழக அரசு மத்திய பாஜக அரசு வழியில் +2 தேர்வை ரத்து செய்து விட்டது" என்ற தி மு க அறிக்கை வந்திருக்கும் அ தி மு க அரசு தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருந்திருந்தால்!
கூட்டணி கட்சிகள் எதிர்த்த போதும், பாஜகவின் வழியில் உறுதியான முடிவை எடுத்த முதல்வருக்கு நன்றி" என்று கூறியுள்ளார்.
பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினரான மதுவந்தினி, தற்போதைய சூழ்நிலையை மனதில் வைத்து தமிழ்நாடு அரசு 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்துள்ளதை சிறந்த முடிவு என்று கூறியுள்ளார்.