பி.பி.ஓ. ஊக்குவிப்புத் திட்டம்...தமிழகத்துக்கு 10 ஆயிரம் இடம்...மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
சென்னை: இந்திய பி.பீ.ஓ. ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் இடங்களை தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி இன்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், "இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் வேலை வாய்ப்பை பெருக்கும் வகையில் பிபீஓ (வணிக செயல்முறை அவுட்சோர்சிங்) மற்றும் ஐ.டி.இ.எஸ். ஆகிய துறைகளை துவங்கியதற்கு உங்களை பாராட்டுகிறேன். இதன்படி, ரூ.493 கோடி மதிப்பீட்டில் இந்தியா முழுவதும் 48 ஆயிரத்து 300 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

சென்னை வரம்பில் உள்ள இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காவிற்கு (STPI) 7,705 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில், புதுச்சேரிக்கு 100 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நேரடியாக 8,587 பேரும், மறைமுகமாக 16 ஆயிரத்து 774 பேரும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். செயல்பாட்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் இந்தத் திட்டத்தின் வெற்றி விகிதம் 93 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் 51 அலகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், இந்தத் திட்டம் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான தமிழக அரசின் நோக்கத்திற்குத் துணைபுரிவதாக உள்ளது. தமிழகத்தில் இத்திட்டத்தின் வெற்றியைக் கருத்தில் கொண்டு, பி.பீ.ஓ ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் தமிழகத்திற்கு 10 ஆயிரம் இடங்களை ஒதுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications